விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இன்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- இலங்கையில் நீடிக்கும் இனச் சிக்கலுக்கு தமிழ் ஈழ விடுதலைதான் ஒரே தீர்வு. தமிழ் ஈழத்தை மீட்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.
- தமிழக மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
- மாநிலங்களுக்கு தன்னாட்சி வழங்கவேண்டும்.
- தாய்மொழி வழி கல்வியை பாதுகாக்க இந்திய அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
- மது உள்ளிட்ட போதை பழக்க வழக்கங்களால் ஏழை மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப உறவுகள் சிதறும் நிலை உள்ளது. இளைய தலைமுறையினர், பள்ளி பருவத்தில் இருந்தே குடிப்பழக்கத்திற்கும், போதை பழக்கங்களுக்கும் அடிமையாகின்றனர். எனவே அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மதுவிலக்கு கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.
- சிறுபான்மையினர் மற்றும் சென்னை குடிசை பகுதி மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
- 1956ம் ஆண்டு நடந்த மாநில எல்லை வரையரையின்போது தமிழகத்தின் பல பகுதிகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களோடு இணைக்கப்பட்டு விட்டன. இவற்றை தமிழக எல்லைக்குள் கொண்டு வரவேண்டும்.
இதற்கான முயற்சிகளை விடுதலை சிறுத்தைகள் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.