அதிமுக கூட்டணி-கிராம லட்சியம்- அனைத்து தொழிலாளர் முன்னணி அமைப்பு விலகல்
கரூர்: அதிமுக கூட்டணியில் இருந்து கிராம லட்சியம்- அனைத்து தொழிலாளர் முன்னணி என்ற அமைப்பு விலகியுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக, மதிமுக, வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளும், கிராம லட்சியம் - அனைத்து தொழிலாளர் முன்னணி போன்ற பல்வேறு சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருந்தது.
மதிமுகவிற்கு உரிய தொகுதிகள் வழங்க அதிமுக மறுத்துவிட்டது. இதனால் தங்களுக்கு உரிய முக்கியத்துவமும், தொகுதிகளும் கிடைக்கவில்லை என்று அதிமுக மீது குற்றம் சாட்டி மதிமுக வெளியேறி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் தொழிலாளர்கள் நலன் குறித்து பல்வேறு தகவல்களை பேசவும், குறிப்பாக அனைத்து தொழிலாளர் நல வாரியங்கள் கலைக்கப்படாமல் தொடர்ந்து நீடிக்கும் என்ற உத்தரவாதத்தை பெறவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா- வை சந்திக்க கிராம லட்சியம்- அனைத்து தொழிலாளர் முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் தலித் பாண்டியன் நேரம் ஒதுக்குமாறு கேட்டாராம். ஆனால் இதற்கு அதிமுக தரப்பில் இருந்து முறையான பதில் இல்லையாம்.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து தொழிலாளர்கள் நலன் கருதி கிராம லட்சியம்- அனைத்து தொழிலாளர் முன்னணி விலகுவதாக தலித் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக அதிமுக கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் விலகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications