திமுக அரசைத் துரத்த மக்கள் தீர்மானித்து விட்டனர்-ஜெயலலிதா
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இன்று அதற்கான வேட்பு மனுவை திருச்சியில் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா அவர்களிடையே தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னைக்கு மிக அருகில் இருப்பதால்தான் நான் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட முடிவு செய்தேன். ஆண்டிப்பட்டியிலிருந்து மாற வேறு காரணம் எதுவும் இல்லை.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கத்திற்கு மட்டும் சிறப்பு சலுகைகள் காட்டப்பட மாட்டாது. மாறாக தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் தனி கவனம் செலுத்துவேன்.
(கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறியது குறித்துக் கேட்டபோது) நாங்கள் எப்போதுமே அடுத்து என்ன என்பது குறித்து மட்டுமே கவலைப்படுவோம்.
திமுக அரசு ஊழல் கறை படிந்தது. இந்த அரசை அகற்றி அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தீர்மானித்து விட்டனர். வருகிற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார் ஜெயலலிதா.