கொளத்தூரில் முக ஸ்டாலின் - விஜய்காந்த் அனல் பிரச்சாரம்!!
தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல்வர் கருணாநிதி 23-ந்தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். 2-ந்தேதி தஞ்சையிலும், நேற்று திருச்சியிலும் பிரசாரம் செய்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரசாரம் செய்தார். இன்றும், நாளையும் திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிசாரத்தைத் தொடங்கினார்.
நேற்று சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பிரசாரம் செய்தார்.
நேற்று மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் பிரசாரம் செய்தார். மு.க.ஸ்டாலின் இன்று அவர் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு சென்னை 51-வது வார்டு திரு.வி.க.நகர் கோபாலபுரம் சந்திப்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
தொடர்ந்து 52, 53-வது வார்டுகளில் ஓட்டு கேட்கிறார். இரவு 10 மணிக்கு 53-வது வார்டில் உள்ள அன்னை சத்யாநகர் காசிவிஸ்வநாதர் கோவில் அருகே பிரசாரத்தை முடிக்கிறார்.
கொளத்தூர் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் இன்று பிரசாரம் செய்தார். அவர் கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. சைதை துரைசாமிக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று ஓட்டுக் கேட்டார். இன்று காலை 10 மணி அளவில் கொளத்தூர் தொகுதி ரெட்டேரி சந்திப்பில் பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து பேப்பர்மில் ரோடு, அண்ணாசாலை, எஸ்.ஆர்.பி. கோவில், 70 அடி ரோடு சந்திப்பு, பெரவள்ளூர் சந்திப்பு, திரு.வி.க.நகர் பஸ்நிலையம், சிம்சன் மைதானம், மூலக்கடை பகுதிகளில் திறந்த வேனில் சென்று ஓட்டுக் கேட்டார்.
மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் ஒரே தொகுதியில் போட்டி பிரசாரம் செய்வதால் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் உற்சாகமாக உள்ளனர்.