எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நாளை தொடக்கம்-9.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை: தமிழகத்தில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வு துவங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட ஒன்பதரை லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வரை நடக்கும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் கடந்த 22-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர். மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,561 பேர் எழுதுகிறார்கள்.
சென்னையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 272 பள்ளிகளைச் சேர்ந்த 36,148 மாணவ-மாணவிகள் 223 மையங்களில் எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 17,124 பேர். மாணவிகள் 19,024 பேர். தனித்தேர்வர்கள் ஒரு லட்சம் பேரையும் சேர்த்தால் மொத்தம் 91/2 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரும், பள்ளிக்கல்வி பொறுப்பு இயக்குனருமான தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
தேர்வு அட்டவணை வருமாறு:
எஸ்.எஸ்.எல்.சி.
28-ம் தேதி- தமிழ் முதல் தாள்
29-ம் தேதி- தமிழ் 2-ம் தாள்
31-ம் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1-ம் தேதி- ஆங்கிலம் 2-ம் தாள்
5-ம் தேதி- கணிதம்
8-ம் தேதி- அறிவியல்
11-ம் தேதி- சமூக அறிவியல்
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு
28-ம் தேதி- தமிழ்
29-ம் தேதி- மொழித்தாள்-1 (சமஸ்கிருதம், அரபி)
31-ம் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1-ம் தேதி- ஆங்கிலம் 2-ம் தாள்
2-ம் தேதி- மொழித்தாள்-2 (சமஸ்கிருதம், அரபி)
5-ம் தேதி- கணிதம்
8-ம் தேதி- அறிவியல்
9-ம் தேதி- சிறப்பு மொழித்தாள்-3 (சமஸ்கிருதம், அரபி)
11-ம் தேதி- சமூக அறிவியல்
எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்களின் பதட்டத்தைப் போக்கும் வகையில் வினாத்தாளை வாசிப்பதற்காக 15 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications