அரசியல்வாதிகளிடமிருந்து மது, பிரியாணி வாங்காதீங்க: நரேஷ்குப்தா வேண்டுகோள்
சென்னை: அரசியல்வாதிகள் மது பாட்டில், பிரியாணி தர வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கவும் கூடாது, அவர்கள் கொடுத்தாலும் வாங்கவும் கூடாது என்று தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
காந்திய அறக்கட்டளை மற்றும் காந்திய நிறுவன அமைப்புகள் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தின. இந்த பேரணி நேற்று காலை சென்னை காந்தி சிலையில் இருந்து துவங்கியது. இதற்கு தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமை வகித்தார்.
இதில் மகாத்மா காந்தியிடம் 5 ஆண்டுகள் தனி செயலாளராக பணியாற்றிய கல்யாணம், காந்திய நிறுவன அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பி.மாருதி, சி.வி.டி.ராகவலு, டி.கே. ஓசா, அம்புரோஸ், ஜான்தன்ராஜ், வழக்கறிஞர் பால சீனிவாசன், தமிழ்நாடு குடிசைவாழ் பெருமன்ற தலைவர் நேருதாசன், அமராவதி நதிநீர் பாசன இயக்கத்தின் பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி, மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியின்போது தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு கொடுக்கப்பட்டன.
பேரணி முடிந்ததும் நரேஷ்குப்தா நிருபர்களிடம் கூறியதாவது,
அரசியல் வாதிகள் மது பாட்டில், பிரியாணி தர வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கவும் கூடாது, அவர்கள் கொடுத்தாலும் வாங்கவும் கூடாது. வேட்பாளர்கள் மது பாட்டில்களோ, பிரியாணியோ கொடுக்கக்கூடாது.
அரசியல்வாதிகள் பிரசாரம் செய்கையில் கொள்கை முடிவுகளைப் பற்றித்தான் பேச வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது.
அனைவரும் ஓட்டுபோடுவது புனிதமான கடமை என்று முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கிறார். எனவே அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும்.
விமான நிலையத்திற்கு சென்றால் சோதனை செய்வதுபோல தான் தற்போது தேர்தல் அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்கிறார்கள்.
தகுந்த ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது இல்லை. உரிய ஆவணங்கள் இன்றி பெரிய தொகையை எடுத்துச்சென்றால், கட்டாயம் அந்த பணம் எப்படி வந்தது என்று விசாரணை நடத்தியாக வேண்டும். இதில் ஒன்றும் தவறு இல்லை. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு ஏராளமான பணம் கொடுக்கிறார்கள். ஆகவே வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதில் எந்த தவறும் இல்லை என்றார்.