குடும்ப அரசியலை அடியோடு ஒழிக்க வேண்டும்: இல. கணேசன்
குற்றாலம்: தமிழகத்தில் குடும்ப அரசியலை அடியோடு ஒழிக்க வேண்டும் என குற்றாலத்தில் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
குற்றாலத்தில் பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி நகர தலைவர் விவேக் பாண்டியன் தலைமை வகித்தார். குற்றாலம் நகர பொறுப்பாளர் திருமுருகன் வரவேற்றார். கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் 110 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் பாஜகவின் பிரதான நோக்கம் தி்முக அரசை அகற்றுவதுதான். கடந்த சில தினங்களாகவே தமிழக முதல்வர் கருணாநிதி தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வருகிறார். இதற்கு காரணம் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிதான். இந்த கெடுபிடிகளால் அப்பாவி பொதுமக்கள், சிறுவியாபாரிகள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதில் வெற்றி பெற்றதை போன்று இந்த தேர்தலிலும் இது போன்ற செயலை கையாளலாம் என நினைத்து இதனை ஒரு பார்முலாவாகவே மாற்றி கொண்டனர் திமுகவினர்.
இப்படி கூறுவதால் பாஜக ஒன்றும் திமுகவை வெறுக்கவில்லை. அதேசமயம் அதிமுகவை ஆதரிக்கவும் இல்லை.
தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் குடும்ப அரசியலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கிய நோக்கம் என்பதை மக்கள் மத்தியில் தெரிய வைப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications