மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால்...:!: பாக். வீரர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடக் கூடாது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வரும் 30-ம் தேதி மொகாலியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி நடக்கின்றது. இதையொட்டி தான் ரெஹ்மான் மாலிக் பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
யாரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்துள்ளேன். அவர்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். அதையும் மீறி ஏதாவது நடந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
பாக். வீரர்கள் குற்றமற்றவர்கள் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் அவர்கள் யார் யாரை சந்திக்கிறார்கள், யாரிடம் எல்லாம் செல்போனில் பேசுகிறார்கள் என்று உளவுத் துறை தகவல் சேகரித்து வருகிறது.
லண்டன் சம்பவத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நடக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். லண்டனில் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் 3 பாக். வீரர்கள் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.