கருணாநிதி அறிக்கையை வழக்காக எடுக்க தகுதி இல்லை-உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

Chennai High Court
சென்னை: முதல்வர் கருணாநிதி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை விமர்சித்து வெளியிட்ட அறிக்கையை வழக்காக எடுத்து விசாரிக்க தகுதி இல்லை என்று கூறி அந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வரும் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை தடை செய்யக் கோரி அமைச்சர் கே.பி.பி.சாமி, தலைமை ஆசிரியர் தில்லை நடராஜதன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் முதல்வர் கருணாநிதி இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையையும் கோர்ட் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்தது.

முதல்வர் கருணாநிதி அறிக்கையை வழக்காகப் பதிவு செய்து நீதிபதிகள் எலிப்பே தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்துக்கும் சேர்த்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தலைமை நீதபிதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 324-ன் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தலை நியாயமாக, வெளிப்படையாக நடத்த முழு அதிகாரம் உள்ளது. அதை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

யாரும் கேள்வி கேட்க முடியாது

தேர்தலுக்காக ஒரு குறிப்பிட்ட அதிகாரியைப் பயன்படுத்துவதும், குறிப்பிட்ட அதிகாரியைப் பயன்படுத்தாமல் இருப்பதும் தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

நமது நாட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், தேர்தலை நியாயமாக, வெளிப்படையாக நடத்துவதும், தனிநபர் அல்லது கட்சியின் பண பலத்தால், ஜனநாயக நடைமுறை தோல்வியுறாமல் பார்த்துக் கொள்வதும், தேர்தல் குற்றங்களில் ஈடுபடுவோரைத் தண்டிப்பது மட்டுமல்லாமல் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி தேர்தல் குற்றங்களைத் தடுப்பதும் ஆணையத்தின் கடமை.

தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையம் யாருடனும் கலந்தாலோசிக்கவில்லை என்பது தவறு. அரசின் தலைமைச் செயலர், டி.ஜி.பி., மற்ற போலீஸ் அதிகாரிகள், உள்துறைச் செயலர் ஆகியோருடனும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன.

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுகிறது. அதனால், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு தொகுதியின் முடிவு குறித்து வெளியிடப்படும் அறிவிப்பு மற்ற மாநிலங்களில் நடைபெறும் வாக்குப் பதிவைப் பாதிக்கும். அதனால் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

டிஜிபி யார் என்பதை நிர்ணயிப்பது எங்களது உரிமை

எந்த டி.ஜி.பி.யிடம் தேர்தலை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் உள்ளது.

அதனால் டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனத்துக்கும் தேர்தல் நேரத்தில் யார் டி.ஜி.பி.யாக இருக்க வேண்டும் என்பதற்கும் தொடர்பு இல்லை. அவரது நியமனத்தில் உச்சநீதிமன்றம் தலையிடவில்லை என்பது இந்த வழக்குக்கு தொடர்புடையது அல்ல.

சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியே தேர்தல் ஆணையத்தின் முடிவு பற்றி கேள்வி கேட்கவில்லை. அதனால், அது தொடர்பான முதல்வரின் அறிக்கையை வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையற்றது.

உயர்நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் லத்திகா

தமிழ்நாட்டில் 2006 உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இந்த உயர் நீதிமன்றம் லத்திகா சரணை சாடியுள்ளது.

அத்தகைய சூழலில் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக வேறோர் அதிகாரியை தேர்தலை நடத்தும் பொறுப்புக்கு நியமிப்பது தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது. எனவே, அத்தகைய நடவடிக்கையை பாரபட்சம் என்று கூற முடியாது.

தேர்தல் ஆணையத்துக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம், வருமான வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறப்பு அதிகாரம் உள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள தொகைக்கு உட்பட்டே செலவு செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுத்தால் அவற்றுக்கான செலவும் தேர்தல் செலவில் அடங்கிவிடும்.

சட்ட விரோதமாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை பல நடவடிக்கைகள் மூலம் தேர்தல் கமிஷன் தடுக்கிறது. இதற்காக பறக்கும் படை நியமிக்கப்பட்டு இருக்கிறது. எனவே சந்தேகத்துக்கு உட்பட்ட மது பாட்டில்கள், பணம் உள்ளிட்ட பொருட்களை சோதனை செய்வது அவசியமாக உள்ளது.

அவசரத்துக்காக நேர்மையான முறையில் பணம் கொண்டு சென்றால் அதை உடனே திருப்பி கொடுத்து விடுகிறோம். எனவே சட்டத்துக்கு உட்பட்டு கொண்டு செல்லப்படும் பணத்துக்கு நிச்சயம் பாதுகாப்பு உண்டு. இது பற்றி மக்களுக்கு போதிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.

வழக்கு போட்டு தொல்லை செய்யக் கூடாது

மும்பை தாக்குதல் சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் நோக்கத்தில் அனைத்து கார்களையும் பரிசோதனை செய்து வருகிறோம். கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்திருக்கிறோம். சரியான கணக்கை காட்டாமல் யாராவது பணத்தை திரும்பக் கேட்டு கோர்ட்டுக்கு வந்தால் அவரது வழக்கை கோர்ட் ஏற்கக்கூடாது.

சேலத்தில் நடத்திய சோதனையில் தகுந்த ஆவணம் இல்லாமல் 9 ஆயிரம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. பல்வேறு சம்பவங்களில் வேஷ்டி, சேலைகள், 3,823 லிட்டர் மது கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக 244 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் நாங்கள் கடமை தவறியவர்களாகிவிடுவோம்.

பொதுநலன் வழக்கு என்ற பெயரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன் மனு தாக்கல் செய்வதற்கு தகுதியில்லை. அவர் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இப்படி வழக்குகளை போட்டு தொல்லை செய்யக்கூடாது. கணக்கில் வைக்கப்படாத பணத்தை பிடிப்பதை எதிர்க்கக்கூடாது.

அமைச்சர் கே.பி.பி.சாமியின் வீட்டில் வேஷ்டி சேலைகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில்தான் சோதனை மேற்கொண்டோம். இல்லை என்பது தெரிந்ததும் திரும்பி வந்துவிட்டோம். இந்த வீடியோ காட்சிகளை நாங்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தரவில்லை.

தேர்தலை சுதந்திரமாக நடத்த முடியாது

அரசியல் சாசனம் மட்டுமல்ல குற்ற விசாரணை முறைச்சட்டம், வருமானவரிச் சட்டங்களின் அடிப்படையிலும் எங்களுக்கு ஒட்டுமொத்த அதிகாரம் உள்ளது. பத்திரிகை செய்திகள், தகவல்களின் அடிப்படையில்தான் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதை தடுத்தால் எங்களால் தேர்தலை சுதந்திரமாக நடத்த முடியாது. எனவே, தேர்தல் நடவடிக்கைகளை எதிர்க்கும் எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அட்வகேட்ஜெனரல் விளக்கம்

தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிடுகையில்,

தேர்தல் ஆணையம், தேர்தலை நியாயமாக, நேர்மையாக, வெளிப்படையாக நடத்துவதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

தேர்தல் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு வெற்றி கிடைக்கிறதென்றால் அந்தப் பெருமை மாநில அரசையும் சாரும். எனினும், அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது தேர்தல் ஆணையம் மாநில அரசையும் கொஞ்சம் கலந்தாலோசித்தால் நன்றாக இருக்கும்.

ஏனெனில், தமிழக டி.ஜி.பி. யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவரை டி.ஜி.பி. பணியில் இருந்து தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

மேலும், மாற்றப்படும் அதிகாரிகளுக்குப் பொறுப்பு வழங்கப்படாதபோது அவர்களுடைய பணி பதிவேட்டில் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. எனவே, அவ்வாறு மாற்றப்படுகிறவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்றார்.

தேர்தல் ஆணையத்தின் பதிலைப் பரிசீலித்த தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், முதல்வரின் அறிக்கையை தன்னிச்சையாக வழக்காகப் பதிவு செய்ததற்கு தகுதி இல்லை என்று கூறி அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

சுவோமோட்டோ வழக்குகளில் அவசரம் கூடாது-நீதிபதிகள்

இதுதொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பொதுநலனுக்காக தனிச்சையாக (சுவோமோட்டோ) ரிட் வழக்குகளை எடுப்பதற்கு முன்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிகுந்த கவனம் தேவை. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மனதில் வைத்தே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏதாவது பத்திரிகையில் வந்த செய்தியை வழக்காக நீதிபதி எடுக்கும் பட்சத்தில் முன்னதாக அதுபற்றி தலைமை நீதிபதியிடம் தெரிவிக்காமல் இருப்பது முறையான செயல் அல்ல.

இந்த வழக்கை பொறுத்தவரை, தேர்தல் கமிஷன் மீது முதல்வர் சில புகார்களை தெரிவித்துள்ளார். அதிகாரத்தை அளவு கடந்து பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை என்பதும், நியாயமான காரணங்களுக்காக கொண்டு செல்லப்படும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது என்பதும் அவரின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆனால் தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த விவகாரத்தை அரசியல் சாசன பிரச்சினையாக எடுக்கத் தேவையில்லை. தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் தேதியை நிர்ணயிப்பதும் தேர்தல் முடிவை அறிவிக்கும் தேதியை முடிவு செய்வதும் தேர்தல் கமிஷனின் தனிப்பட்ட அதிகார எல்லைக்கு உட்பட்டது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதைப் போல அரிதுக்கும் அரிதான விவகாரத்தில் மட்டுமே உயர்நீதிமன்றம் தலையிடலாம். மற்றபடி தலையிட முடியாது.

வாகன சோதனை தொடர்பாக பியோ பெர்னாண்டஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி பி.ஜோதிமணி கடந்த 22-ந் தேதி தேர்தல் கமிஷனுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

எந்தத் தகுதியும் இல்லை

இவற்றை கருதும் வேளையில் நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் தனிச்சையாக எடுத்த வழக்கில் எந்தத் தகுதியையும் காணவில்லை என்பதால் அதை முடித்து வைக்கிறோம். அரசைக் கேட்காமலேயே அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுவது பற்றி 29-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+