நடிப்புக்காக கூட மரக்கன்று நடாதவர் விஜயகாந்த்: ராமதாஸ்
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் பாமகவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. பாமகவின் பசுமைத் தாயகத்தை கடுமையாக கிண்டலடித்து விமர்சித்து வருகிறார் விஜயகாந்த். இதற்கு டாக்டர் ராமதாஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று ஒடுக்கத்தூரில் அணைக்கட்டு தொகுதி பாமக வேட்பாளர் ம.கலையரசு அறிமுகக் கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து ராமதாஸ் பேசியதாவது,
இன்று பெண்களே திமுகவின் தேர்தல் அறிக்கையை பிரசாரம் செய்கின்றனர். அதனால் கருணாநிதி 6-வது முறையாக தமிழக முதல்வராவது உறுதி.
அறிக்கை மன்னன், போராட்ட மன்னன் என்றெல்லாம் என்னை ஒரு நடிகர் (விஜயகாந்த்) விமர்சித்து கொண்டிருக்கிறார். என்னை இழிவுபடுத்துவதாகக் கருதி அவர் அப்படிப் பேசுகிறார்.
நான் அறிக்கை மன்னனேதான். சமூக விழிப்புணர்வுக்காகவும், அடிதட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அறிக்கை மூலம் குரல் கொடுப்பவன்.
மக்களுக்கு சமூக நீதி கிடைக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தி சிறைக்கு சென்றவன். பாளையங்கோட்டை சிறையைத் தவிர மற்ற சிறைகளையும் பார்த்தவன். என்னை பாமகவினர் போராளி என்று அழைப்பதையே விரும்புபவன். அதனால் என்னை போராட்ட மன்னன் என்று அவர் சரியாகத்தான் கூறியுள்ளார்.
தனது கல்யாண மண்டபத்தை இடித்ததற்காகவும், சினிமா திரையரங்கில் தனது படத்தை திரையிடவும் மட்டுமே போராடிய அவர், மக்களுக்காக எந்த போராட்டத்தை நடத்தி, எந்த சிறைக்கு சென்றார்?
பசுமை தாயகம் சார்பில் மழைநீர் சேகரிப்புக்காக 600-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியுள்ளோம். படத்தில் நடிப்புக்காக கூட ஒரு மரக்கன்றை அவர் நட்டதில்லை. அப்படிபட்டவர் பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீண்டநாள் தூங்கிவிட்டு, தேர்தல் வந்ததும் தான் விழித்திருக்கிறார். அடித்தட்டு மக்களைப் பற்றி அறியாத அவருக்கு எழுதிக் கொடுப்பதை மட்டுமே படிக்கத் தெரியும். அவர் திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் ஸ்டண்ட் அடித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.
ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது என்று மக்களுக்கு தெரியும். அதனால் அவருக்கு அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு தரவே விரும்புகிறார்கள் என்றார்.