தேர்தல்: இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். அதனால் இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட 4,280 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 28-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் குறைபாடுகள் உள்ள ஆயிரத்து 153 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 3 ஆயிரத்து 127 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் இன்று(30-ம் தேதி) மாலை 3 மணி வரை வாபஸ் பெறலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெரும்பாலும், கட்சியின் அதிகார்பபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தான் வாபஸ் பெறுவர்.
மனு வாபஸ் பெற கடைசி நாளான இன்று ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்பகல் 3 மணிக்குப் பிறகு மீதமுள்ள மனுக்களை எண்ணி இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியிடப்படுகிறது. இதையடுத்து தான் சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.