தேர்தல் வந்துவிட்டால் திருமங்கலம் கலாச்சாரமும் வந்து விடுகிறது: பிரேமலதா

மதுரையில் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகையில்,
இந்த மதுரை மக்கள் வீரம் நிறைந்தவர்கள். இந்த மண்ணின் மருமகள் என்பதால் உங்களிடம் முரசு சின்னத்துக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். அப்போதுதான் அட்டகாசத்திற்கு ஒரு முடிவு கட்ட முடியும். தேர்தல் வந்துவிட்டால் திருமங்கலம் கலாச்சாரம் வந்து விடுகிறது. கட்டப் பஞ்சாயத்தும் அதிகரித்துள்ளது.
இங்கு மக்கள் மவுனமாக இருக்கிறார்கள். இந்த மவுன புரட்சி நமக்கு வெற்றி புரட்சியாக மாறும். மதுரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாட்டு தலையை வீசியதாக 5 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மாட்டுத் தலையை வீசியது அவர்கள் இல்லை என்றால் 5 பேரையும் விடுதலை செய்ய பாடுபடுவோம்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்று கேப்டன் செயல்பட்டு வருகிறார். இப்போது புரட்சி தலைவி ஜெயலலிதா உடன் புரட்சி கலைஞர் கேப்டன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த இரு புரட்சி கூட்டணி மக்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க கூடிய கூட்டணியாகும்.
எங்கள் கேப்டன் சினிமாவில் மட்டும் தான் நடிப்பார். ஆனால் மக்களிடம் நடிப்பவர் கருணாநிதி. திமுக எந்தத் திட்டம் அறிவித்தாலும் அதன் பலன் கலைஞருக்கு தான் போகும் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சொல்வார். இப்போதும் இலவச டி.வி. கொடுத்து கேபிள் இணைப்பு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3,000 கோடி அளவுக்கு மக்கள் பணம் அவரது குடும்பத்துக்கு சென்றுள்ளது.
பாரதப் போரில் அர்ச்சுணன் வெற்றி பெற்றது போல் தேமுதிக, அதிமுக வேட்பாளர்கள் வெல்வார்கள் என்றார்.
5 வாகனங்களில் அணிவகுப்பு-பிரேமலதா மீது வழக்கு:
முன்னதாக அறந்தாங்கி அருகே பிரசாரத்தின் போது 5 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு 15 வாகனங்கள் பயன்படுத்திய பிரேமலதா மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications