ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை கூட்டணி தலைவர்களே நம்பவில்லை-ஸ்டாலின்

நெல்லை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிராஞ்சேரி, மேலச்செவல், பத்தமடை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை, சிவந்திபுரம், விக்கிரமசிங்கபுரம்,
கீழ ஆம்பூர், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், கடையம், மாதாபுரம் ஆகிய ஊர்களில் பிரச்சாரம் செய்து ஸ்டாலின் பேசுகையில்,
அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஒற்றுமையுடன், ஒரே மேடையில் ஒரு கூட்டத்தைக் கூட நடத்த முடியவில்லை. இதன் மூலமே, அந்த கூட்டணி ஒரு முரண்பாடான கூட்டணி, குழப்பமான கூட்டணி என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை எல்லாம் கலைஞர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று, தோழமை கொண்டுள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது தேர்தல் பிரசாரங்களில் வலியுறுத்தி பேசுகிறார்கள்.
அதே நேரத்தில், ஜெயலலிதா அமைத்துள்ள கூட்டணியில் உள்ளவர்கள் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையை பற்றி பேசுவது இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம், ஜெயலலிதா நிறைவேற்றுவார் என்று அந்தக் கூட்டணியில் உள்ள முன்னாள் கதாநாயகனோ, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோ, தங்களது தேர்தல் பிரசாரங்களில் குறிப்பிடுவது இல்லையே... ஏன்?.
ஜெயலலிதா தனது வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்ற மாட்டார் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், அதுபற்றி அவர்கள் தேர்தல் பிரசாரங்களில் எதுவும் குறிப்பிடுவதில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர்களே, ஜெயலலிதாவை நம்பவில்லை. பின்னர் தமிழக மக்கள் மட்டும் எப்படி நம்புவார்கள்?.
ஆட்சியை பிடித்து முதல்வராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிற அவர், சுயமாக சிந்தித்து மக்களுக்காக ஒரு தேர்தல் அறிக்கையைக் கூட தயார் செய்யக் கூடாதா?.
பல்வேறு அறிவிப்புகளை குறிப்பிட்டு சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு உள்ளார். அதனை 'கதாநாயகி' என்று கூறி தமிழ்நாட்டு மக்களிடம் அறிமுகம் செய்து உள்ளார். முதல்வர் சொன்னால் நிச்சயம் செய்வார், செய்வதைத் தான் சொல்வார். இதை தமிழக மக்கள் நம்புகிறார்கள்.
வேதனைகள் நிறைந்த ஆட்சியைத்தான் ஜெயலலிதா அளித்தார். அதனால், அவரால் எந்த சாதனைகளையும் சொல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை. தேர்தல் நேரத்தில் கூட, வெறும் 15 நாட்கள் அவரால் சாலையில் சென்று மக்களை சந்திக்க முடியவில்லை. 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஊர்களுக்கு கூட ஹெலிகாப்டரில் பறக்க தொடங்கி விட்டார். இந்த வயதிலும் தலைவர் கருணாநிதி சாலை வழியாகவே சென்று மக்களை சந்திக்கிறார்.
நீண்ட காலமாக கொடநாட்டில் ஓய்வில் இருந்த ஜெயலலிதா, தேர்தல் வந்தவுடன் விழித்தெழுந்து மக்களை சந்திக்க வந்திருக்கிறார். தேர்தல் முடிந்தவுடன் அவர் மீண்டும் கொடநாட்டிற்கு சென்று விடுவார்.
நாங்கள் தேர்தல் நேரம் மட்டுமன்றி எந்த நேரத்திலும் வந்து உங்களுக்கு கடமையாற்றி வருகிறோம். சிலர், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவார். பின்னர் மக்களையும் மறந்து விடுவார், நாட்டையும் மறந்து விடுவார் என்றார் ஸ்டாலின்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் தெத்துவாசல்பட்டி, கந்தர்வகோட்டை பஸ்நிலையம் அருகே, வேலாடிப்பட்டி, அம்புகோவில், கறம்பக்குடி, துவார், புதுப்பட்டி, மழையூர், சம்பட்டிவிடுதி, வடவாளம், இச்சடி, அண்ணாசிலை பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் வெறும் எழுத்தளவில், ஏட்டளவில் நின்றுவிடாமல் அத்தனையும் நிறைவேற்றியவர் முதல்வர் கருணாநிதி.
கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது திருமண உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபோது உதவித்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.30,000 ஆக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் திருமண உதவித்திட்டத்தை தடுத்து நிறுத்தினார். தலைவர் கலைஞர் தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்வார்.
ஜெயலலிதாவும் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டுருக்கிறார்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வானத்தை கிழிப்போம், வைகுண்டத்தை காட்டுவோம் என்ற அறிக்கை. நிறைவேற்ற முடியாத காரியத்தை எல்லாம் சொல்லியிருக்கிறார். அவங்களுக்கு என்ன நம்பிக்கையின்னா, ஆட்சிக்கு வந்தாதானே செய்யனும்- அதான் நாம வரப் போவதில்லையே என்ற தைரியத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
புருடா விடுவாங்கனு சொல்லுவாங்களே புருடா- அந்த புருடா விட்டுருங்காங்க'. இதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் விவரமானவர்கள், நான் உங்களுக்கு அதிகம் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications