ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுக கூட்டணியை வைகோ ஆதரிக்க வேண்டும்-ராமதாஸ்
ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வேதாரண்யம் ராஜாளி பூங்காவில் நடைபெற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,
வேதாரண்யம் தொகுதியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடைசி நேரத்தில் எங்களுக்கு கிடைத்தது.
தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டால் நாங்கள் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம். ஐந்து ஆண்டு காலம் எங்கள் ஆதரவு தொடரும்.
நமக்கு எதிராக செயல்படுவது அதிமுக கட்சி மட்டும் அல்ல, தேர்தல் கமிஷனும் தான். எனக்கு கிடைத்த தகவல்படி அதிமுக ஒரு தொகுதிக்கு ஐந்து கோடி செலவு செய்ய பணம் இறக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் திமுக வெற்றி பெறும்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளதால் தமிழகத்தின் வடக்கு பகுதியில் நூற்று பத்து தொகுதியில் வெற்றி பெற்று விட்டது. இன்னும் ஆட்சி அமைக்க எட்டு இடங்கள்தான் தேவை, அவற்றையும் வெல்வோம் என்றார்.
பின்னர் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட மதிமுகவையும், வைகோவையும் திமுக கூட்டணிக்கு
ஆதரவு அளிக்க வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
தோல்வி பயத்தால் ஜெயலலிதா தரம் தாழ்ந்து தனி நபர் விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலில் யாரும் ஈடுபடவில்லை. தன் கையில் அடிவாங்கியவர் மகாராஜா ஆவார் என்று விஜயகாந்த் கூறியிருப்பது உளறலின் உச்சக்கட்டம் என்றார்.
ஒரு இடத்தில் கூட தேமுதிக வெல்லாது:
பின்னர் திருக்கோவிலூரில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,
நம்மை எதிர்ப்பதற்கு எதிரணியில் ஒருவரும் கிடையாது. குறிப்பாக 41 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவால் ஒரு தொகுதியில் கூட பெற்றி பெறவே முடியாது.
திருவாரூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கலைஞர் தலைமையில் நான், திருமாவளவன், தங்கபாலு ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் பேசினோம். இனி விழுப்புரம், திண்டிவனத்தில் பேசவிருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த்
போன்றவர்கள் ஒரே மேடையில் பேசுவார்களா, பேச முடியுமா, முடியவே முடியாது.
கலைஞர் சொன்னதை எல்லாம் ஜெயலலிதா அப்படியே சொல்கிறார்.
நான் விஜயகாந்த் பற்றி பேசியது கிடையாது. அந்த கட்சிப் பெயர் கூட எனக்கு தெரியாது. அப்படி இருக்கையில் அவர் தான் கும்மிடிப்பூண்டியில் பேசுகையில் என்னை போராட்ட மன்னன் என்று கூறியுள்ளார். அவர் சரியாகத் தான் என்னை போராட்ட மன்னன் என்று கூறியிருக்கிறார். நான் தமிழ் மக்களுக்காகவும், மொழிக்காகவும் ஏராளமான போராட்டங்கள் நடத்தியுள்ளேன்.
விருத்தாசலத்தை விட்டுவிட்டு ரிஷிவந்தியத்தில் போட்டியிடும் விஜயகாந்துக்கு அத்தொகுதி மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். இந்த தொகுதி மக்கள் ஏமாறுபவர்கள் அல்ல. அதேசமயம் அவர்களை ஏமாற்றுபவர்கள் தான் ஏமாந்து போவார்கள் என்றார்.