பரிசுப் பொருள் வழக்கிலிருந்து ஜெ. விடுவிக்கப்படுவாரா-ஏப். 9ல் தெரியும்
சென்னை: முதல்வராக இருந்தபோது தனக்கு வந்த ரூ. 2 கோடி பரிசு செக்கை தனது வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கில் ஏப்ரல் 9ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, பிறந்த நாளுக்காக தரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள காசோலை உள்ளிட்ட பரிசுப் பொருட்களை பெற்றது குறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் 3 பேரும், தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார்.
அவர் வாதிடுகையில்,
பிறந்த நாள் கொண்டாடுகிற ஒவ்வொருவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்குவது இயல்பு. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா மீதான அன்பின் பேரில் தொண்டர்கள் பலர் கனிவுடன் சில பரிசுகளை வழங்கினார்கள். பிரதிபலன் பார்க்காமல் வழங்கப்பட்ட பரிசுகள் அவை.
எனவே இது தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது. சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்க கூடாது. எனவே இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்து உத்தரவிட வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ கூறுகையில், பரிசுப் பொருட்களை வாங்கும் போது ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தார். எனவே அவற்றை முதல் அமைச்சர் நிவாரண நிதியில்தான் அவர் சேர்த்திருக்க வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடுத்துக் கொண்டாலும், அதை கட்சி நிதியில்தான் இணைத்திருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா அவற்றை தனது சொந்த கணக்கில் சேர்த்துள்ளார்.
அது மட்டுமல்ல, அந்த தொகையைப் பற்றி வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில், பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கூறப்படவில்லை என்று தெரிய வந்தது. எனவே இது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வரும். ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பழனிச்சாமி, இந்த வழக்கில் ஏப்ரல் 9ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications