கார்த்திக் கட்சி வேட்பாளர்களை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல்-போலீஸில் புகார்
சென்னை: நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்திக்கை அதிமுக கைவிட்டதால் அவர் வெளியே வந்து 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால் அவர்களில் 3 பேர் அதிமுகவில் போய்ச் சேர்ந்து விட்டனர்.
இந்த நிலையில் தற்போது அவரது கட்சி 21 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.
இந்த நிலையில் இவரது கட்சி வேட்பாளர்கள் 2 பேரை கத்தி முனையில் சிலர் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி தொகுதியில் வீரண்ணராஜு, கம்பம் தொகுதியில் ரவிச்சந்திரன் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் சென்னை சத்தியமூர்த்தி பவன் எதிரில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தபோது துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அண்ணாசாலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து வீரண்ணராஜூ கூறுகையில்,
கடந்த 29-ந்தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிர்வாகிகளுடன் சென்னை வந்தேன். ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் அன்று இரவு தங்கியிருந்தபோது, போடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எங்கள் கட்சியின் வேட்பாளர் அறிவழகன், 2 பேருடன் வந்து ஊருக்கு செல்வோம் என்று கூறினார்.
இதையடுத்து கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனும், நானும் அவருடன் சென்றோம். லாட்ஜில் இருந்து ஆட்டோவில் ஏறி, எல்.ஐ.சி. கட்டிடம் அருகே வந்து இறங்கினோம். அங்கு தயார் நிலையில் இருந்த ஸ்கார்பியோ காரில் எங்களை ஏற்றிக் கொண்டனர். நடுவில் உள்ள இருக்கையில் என்னை உட்கார சொன்னார்கள். அறிவழகனும், ரவிச்சந்திரனும் பின்னால் ஏறிக் கொண்டனர்.
எனது அருகில் அடையாளம் தெரியாத 2 பேர் உட்கார்ந்து கொண்டனர். நீங்கள் யார்? எங்கே போகிறோம் என நான் அவர்களிடம் கேட்டேன். இதற்கு அவர்கள் பேசாமல் வா... எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் திகைத்துப்போய் இருந்தேன். இந்த நேரத்தில் எனது மனைவியிடமிருந்து எனக்கு போன் வந்தது. என்னை அவருடன் பேசுவதற்கு அனுமதிக்காமல் செல்போனை பிடுங்கிக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் பெட்ரோல் போடுவதற்காக காரை நிறுத்தினார்கள். அப்போதுதான் காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க. கொடி கட்டியிருப்பதை நான் பார்த்தேன். பின்னர் கார் புறப்பட்டதும் என்னை கீழே இறக்கி விடுகிறீர்களா என சத்தம் போட்டு காரில் இருந்து குதிக்கவா என்று நான் கோபமாக கேட்டேன். உடனே அருகில் இருந்த ஒருவர் துப்பாக்கியை காட்டி என்னை மிரட்டினார். இதனால் என்னால் எதுவும் பேசமுடியவில்லை.
பின்னர் மறுநாள் காலையில் கார் திண்டுக்கல்லில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்தவர்களுக்கு ஒரு போன் வந்தது. உடனே என்னையும், கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனையும் கீழே இறக்கி விட்டுவிட்டு அறிவழகனை (போடி தொகுதி வேட்பாளர்) மட்டும் அழைத்துச் சென்று விட்டனர்.
போடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவரது வெற்றி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்கள் கட்சி வேட்பாளரை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.
நான் போட்டியிடும் தொகுதியில் பார்வர்டு பிளாக் நிற்கிறது. ரவிச்சந்திரன் போட்டியிடும் கம்பம் தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இவர்கள் தோற்றால் பரவாயில்லை என்று அ.தி.மு.க. நினைத்திருக்கலாம் என்றார்.
இவர்கள் சொல்வது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications