அழகிரியின் போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்-டெம்போவில் காவலர்களை அழைத்துச் சென்றனர்

Subscribe to Oneindia Tamil

மதுரை : மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஒரு டெம்போவை அனுப்பி அதில் பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரை கூட்டிக் கொண்டு போய் விட்டனர்.

இதையடுத்து பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரிடம் அழகிரி புகார் தெரிவித்ததையடுத்து அவருக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை, சத்யசாய் நகரில் அழகிரியின் வீடு உள்ளது. அங்கு 24 மணி நேர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துப்பாக்கி சகிதம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென தேர்தல் ஆணைய உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதற்கு அழகிரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனக்கும் என் குடும்பத்துக்கும் ஏதாவது நேர்ந்தால் அதற்கு மதுரை கலெக்டரும், கமிஷனரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கடுமையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

எனது வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. வேண்டுமென்றே ஏதோ சதி செய்து இதை செய்து உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் சமுக விரோதிகள் குற்றச்செயல் புரிய காரணமாகி விடும். எனது உயிருக்கும், குடும்பத்திற்கும், உடமைக்கும், ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதற்கு தேர்தல் கமிஷன், மதுரை கலெக்டர் சகாயம், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் ஆகியோர்தான் பொறுப்பு.

நான் தென்மாவட்டங்களில் தீவிரமாக தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். எனது பணியை முடக்குவதற்காக, வேண்டுமென்றே நான் சுற்றுப்பயணத்தில் இருந்த போது, என் வீட்டிற்கு கொடுத்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர். இது அராஜகமான செயல்.

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், எனது வீட்டிற்கு ஒரு போலீஸ் டெம்போ வேனை அனுப்பி வைத்து, வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த அனைத்து போலீசாரும் அதில் ஏறி வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். அப்படி வராவிட்டால் சஸ்பெண்ட் செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம்.

தேர்தல் பிரசாரத்திற்கு சென்று நான் திரும்பிக் கொண்டு இருந்தபோது, எனது காரை சோதனை நடத்தினர். மேலும் எனது வீட்டுக்கு அளித்து இருந்த போலீஸ் பாதுகாப்பையும் வாபஸ் பெற்றுள்ளனர். இது குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தந்தி கொடுத்துள்ளேன்.

கலெக்டர் சகாயம், ஆட்சி மாற்றம் வேண்டும்' என்று பேசியதை நான் வெளியிட்டேன். அதற்கான ஆதாரமும் உள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு, என் இல்லத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் உள்பட பல்வேறு அராஜகங்களை செய்து வருகின்றனர்.

தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அதனால் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

எனது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறித்து பிரதமரிடமும் மத்திய உள்துறையிடமும் புகார் தந்துள்ளேன் என்றார்.

அழகிரி வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏன் வாபஸ் பெறப்பட்டது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை.

இந் நிலையில் இன்று அவரது வீட்டிற்கு வழக்கமாக கொடுக்கப்பட்டு வந்த 20 போலீசார் மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மத்திய மந்திரி அந்தஸ்தில் இருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை தேர்தல் ஆணையம் மீண்டும் வழங்கி உள்ளது.

அதே நேரத்தில் ஏற்கனவே இருந்த போலீசாரை மாற்றி விட்டு புதிய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+