கூட்டணி வென்றால் ஜெயலலிதா தான் முதல்வர்-விஜய்காந்த்
அரியலூர்: அரியலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜய்காந்த், நான் என் கட்சிக்காகத் தான் பிரச்சாரம் செய்ய வந்தேன். அதிமுகவுக்கு பிரசசாரம் செய்ய வரலை என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டபோது
அதிமுக தொண்டர்கள் தங்களது கட்சி கொடிகளை உயர்த்திப் பிடித்தி்ருந்தனர். இதைப் பார்த்த விஜயகாந்த், அந்த (அதிமுக) கொடிகளை கீழே போடுங்க என்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் விஜய்காந்துக்கு எதிராக கூச்சலிட்டனர். உடனே தனது கட்சியினரிடமும் போலீசாரிடமும் அவுங்களைப் பிடிங்க என்று சத்தம் போட்டார் விஜய்காந்த்.
இதையடுத்து விஜய்காந்துக்கு எதிராக அதிமுகவினர் கூச்சல் போடவே, எம்புட்டு நேரம் சொல்ரேன்,கீழே போடு அந்த கொடியை.. நான் என் கட்சிக்கு தான் பிரச்சாரம் செய்ய வந்தேன். உங்களுக்காக பேச வரலை. இப்படி சத்தம் போடுறீங்களே.. அறிவில்லையா.
இங்க நிக்கிற மத்தவன் எல்லாம் (தேமுதிகவினர்) மடையனா.. நான் பிரச்சாரமே பண்ணலை.. என்று கூறிவிட்டு வேனுக்குள் உட்கார்ந்து அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
இதைக் கண்டு பேயறைந்தது போல நின்றிருந்த அதிமுகவினர், சுதாரித்துக் கொண்டு விஜய்காந்துக்கு எதிராக கோஷமிட, அவர்களுக்கும் தேமுதிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார் அவர்களை பிரித்துவிட்டதால் அடிதடி ஏற்படாமல் போனது.
விஜயகாந்துக்கு எதிராக சதி நடக்கிறது-பிரேமலதா:
இந் நிலையில் கூடலூர் தொகுதி தேமுதி வேட்பாளருக்காக விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
கேப்டன் விஜயகாந்த் பற்றி சில தொலைக்காட்சிகள் தவறாக செய்தி வெளியிட்டு வருகிறது. தோல்வி பயத்தால் விஜயகாந்துக்கு எதிராக சதி நடக்கிறது. அதிமுக-தேமுதிக கூட்டணியின் வெற்றி உறுதி. இதனால் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல தேர்தல் தோல்வி பயத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிக்க வேண்டும் என்ற முறையை திமுக பின்பற்றி வருகிறது. நாம் அதற்கு அடிமையாகாமல் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். நீங்கள் போடுகிற ஒவ்வொரு ஓட்டுகளால் அதிமுக-தேமுதிக கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார்.
பிரேமலதா தான் அதிமுக கூட்டணி பற்றி பேசி வருகிறாரே தவிர, விஜய்காந்த் அதிமுக பற்றியோ, ஜெயலலிதா தான் முதல்வர் என்றோ குறிப்பிட்டுச் சொல்ல மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா தான் முதல்வர்:
இது குறித்து பத்திரிக்கைகளில் இன்று செய்திகள் வந்த நிலையில், அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் முதல்வர் அரியணையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் இருப்பார் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருப்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், திமுக உள்ளிட்ட கட்சிகள் தோல்வி பயத்தால் என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளியிடுகி்ன்றன. அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் அரியணையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் அமர்வார் என்றார்.
மேலும் தான் துணை முதல்வர் பதவி கோர மாட்டேன் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications