வேட்பாளர்கள் செலவு தணிக்கையின்போது பொதுமக்கள் உடனிருக்கலாம்-தேர்தல் ஆணையம்
நாகர்கோவில்: வேட்பாளர்கள் செலவு கணக்குகளை தணிக்கை செய்யும்போது பொதுமக்கள் உடனிருக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,
தேர்தல் செலவினங்கள் மேற்கொள்ளுதல் தொடர்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தனியாக வங்கி கணக்குகள் தொடங்க வேண்டும். தேர்தல் செலவினங்களுக்கான தொகை இந்த கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கணக்கில் இருந்து தேர்தல் செலவினங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தல் பிரசார காலத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர் செலவு விபர பதிவேடை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோரின் தணிக்கைகாக குறைந்தபட்சம் மூன்று தடவையாவது சமர்ப்பிக்க வேண்டு்ம். இரு தணிக்கைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 3 தினங்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
தேர்தல் செலவின பார்வையாளர்கள், உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறைகளில் வைத்து தணிக்கை செய்யப்படும். செலவு விபர கணக்குகள், பதிவேடுகள் தணிக்கைக்கு காண்பிக்கப்படாத பட்சத்தில் பதிவேடுகள் சமர்ப்பிக்க கேட்டு அறிவிப்பு அனுப்பப்படும். மீ்ண்டும் கணக்குகளை சமர்பிக்கத் தவறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கணக்கு பராமரிக்க தவறியதாக கருதப்பட்டு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அறிவிப்பு வெளியிடப்பட்ட மூன்று நாட்களுக்குள் கணக்கை காட்டாவிட்டால் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறுதல், பறக்கும்படை, கண்காணிப்பு குழு ஆகியவற்றுக்கு தகவல் அளித்து மேல்நடவடிக்கை தொடர்தல் ஆகியவற்றிற்கு ஆளாக நேரிடும். இது குறி்த்த கடித தொடர்புகள் முழுவதும் அலுவலக விளம்பர பலகையில் வெளியிடப்படும்.
செலவின கணக்குகள் தணிக்கை செய்யப்படும் போது பொதுமக்கள் உடனிருக்கலாம் என்ற விபரம் விளம்பரப்படுத்தப்படும். பொதுமக்கள் 1 பக்கத்துக்கு ரூ.1 வீதம் செலுத்தி ஆவண நகல் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications