6-ம் தேதி ராகுல் ஈரோட்டில் பிரசாரம்: ஒரு நாள் போதுமா?-கவலையில் காங்.
சென்னை: வரும் 6-ம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
வரும் 5-ம் தேதி சோனியா காந்தியும், 6-ம் தேதி ராகுல் காந்தியும் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்கள். 6-ம் தேதி ராகுல் காந்தி ஈரோட்டில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். அவரின் ஒரு நாள் பிரசாரம் பயனளிக்குமா என்று இளைஞர் காங்கிரசார் கவலையில் உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கடந்த தேர்தலில் சென்னையில் 7 தொகுதிகளில் அதிமுக வென்றது. மக்கள்சபை தேர்தலிலும் மூன்றில் ஒரு இடத்தைப் பிடித்தது. இந்த தேர்தலில் திமுக சென்னையில் 5 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளது.
வரும் 5-ம் தேதி தீவுத்திடலில் பிரமாண்ட கூட்டம் நடத்த திமுக தி்ட்டமிட்டுள்ளது. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்து தங்கள் ஒற்றுமையைக் காட்டவிருக்கின்றனர்.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பேச வைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறையைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளான ஏ.எஸ்.எல். படையினர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்தனர். தி.நகர் பனகல் பார்க் அருகே தி.மு.க. கூட்டம் நடத்த முடிவு செய்துள்ள இடம், தீவுத்திடல் ஆகியவற்றை பார்வையிட்டு நேற்று டெல்லி சென்றனர்.
இதற்கிடையே வரும் 6, 7 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி ஈரோடு, திருச்சியில் பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது. ஆனால் ராகுல் அந்த பிரமாண்ட கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரம் செய்வாரா என்று தெரியவில்லை.
அடுத்த வாரம் சோனியா காந்தி புதுவை மற்றும் திருவனந்தபுரத்தில் பிரசாரம் செய்கிறார். வரும் 5-ம் தேதி சென்னையில் பிரசாரத்தை முடித்துவிட்டு நேராக புதுவை செல்கிறார். அங்கு நடக்கும் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரி்த்து பேசுகிறார். இதே போன்று காரைக்காலில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பிரதமர் மன்மோகன் சிங் அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். ஆனால் அந்த தேதி இன்னும் முடிவாகவில்லை.