நாங்கள் யாரும், யாருக்கும் அடிமையல்ல: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
கோபிச்செட்டிப்பாளையம்: கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் யாருக்கும் யாருக்கும் அடிமை இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
திமுக கூட்டணிக் கட்சியான கொமுக சார்பில் கோபியில் சிவராஜ் போட்டியிடுகிறார். அவரை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது,
என்னடா இவர் கடந்த சில மாதங்களாக திமுக மீது குற்றம்சுமத்திப் பேசிவிட்டு தற்போது கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேச வந்திருக்கிறாரே என்று சிலர் நினைக்கலாம்.
நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. கூட்டணிக்காக 100 சதவீதம் உழைப்பவன் காங்கிரஸ்காரன்.
இந்த கோபியில் கடந்த 29 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்த செங்கோட்டையன் தொகுதிக்காக என்னவெல்லாம் செய்துள்ளார் என்று பட்டியல் போட முடியாது.
ஆனால் நான் 5 ஆண்டுகள் கோபி எம்.பி.யாக, மத்திய அமைச்சராக இருந்தபோது கொடிவேரி அணையை சுற்றுலா தலமாக்கியது உள்ளிட்ட பல பணிகளை செய்துள்ளேன்.
எம்.ஜி.ஆரிடம் நெருக்கமாக இருந்த முத்துசாமி, ஈரோட்டுக்கு பல நற்பணிகளை செய்துள்ளார். ஆனால் செங்கோட்டையன் கோபிக்கு எந்த பணிகளையும் செய்யவில்லை.
மாறாக கீரிப்பள்ளம் ஓடை மறுசீரமைப்பு, பாதாள சாக்கடை திட்டம் போன்ற வேலைகளை செய்யவிடாமல் தடுத்தார் அவர். இந்நிலையில் அவர் மீண்டும் கோபியில் வெற்றி பெற்றால் உடனே போயஸ் கார்டனுக்கு சேவை செய்யச் சென்றுவிடுவார்.
கோபி முற்றிலும் பின்தங்கிய பகுதியாக மாறிவிடும். கோபியை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் செங்கோட்டையன் மீண்டும் வெற்றிபெறக் கூடாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications