தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வில் வைகோ பங்கேற்பு
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் ஆய்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொள்ளவிருக்கிறார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நீரி எனும் நிறுவனம் ஆய்வு நடத்துகிறது. இதில் வைகோ கலந்து கொள்கிறார் என்று மதிமுக தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி்த்துள்ளது.
அந்த அறிக்கையில் கூற்ப்பட்டுள்ளதாவது,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதால் அதை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜராகி வாதாடுகையில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிப்பதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் நீரைக் குடிக்கிற ஆடு, மாடுகள் மரணமடைவது அன்றாட நிகழ்வாகிவிட்டது என்றும், விதிமுறைக்கு மாறாக நிறுவப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து சூற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் குறித்து ஆய்வு நடத்தி 8 வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு 'நீரி' என்னும் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த ஆய்வு குறித்து வைகோவுக்கு முன் தகவல் தந்து நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
எனவே வரும் 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் ஆய்வில் கலந்துகொள்ளுமாறு வைகோவுக்கு அந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. அதன்படி 'நீரி' நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும்போது வைகோவும் உடனிருப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications