சாய் பாபா நிலைமை கவலைக்கிடம்: தீவிர சிகிச்சை

கடந்த வாரம் சாய் பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறந்த மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிக்ச்சை அளித்து வருகிறது.
இது குறித்து அம்மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஏ.என்.சபாயா கூறியதாவது,
பகவான் சத்யா சாய் பாபா வென்டிலேட்டர் உதவியால் சுவாசிக்கிறார். அவரின் முக்கிய உறுப்புகள் சிகிச்சையை ஏற்றும் கொள்ளும் நிலையில் இல்லை. அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.
சாய்பாபா விரைவில் குணமடைய வேண்டும்-கருணாநிதி கடிதம்:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி சத்ய சாய்பாபாவின் செயலாளர் சக்கரவர்த்திக்கு “பேக்ஸ்" மூலம் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில்,
சாய்பாபா உடல்நிலை மோசமாக இருப்பதாக வந்த தகவலை அறிந்ததும் மிகவும் மனவேதனை அடைந்தேன். அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி அவருடைய பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும்.
சாய்பாபா தமிழ்நாட்டு மக்கள் மீது மிகவும் அன்பு செலுத்தி வந்தார். அவர்கள் நலனில் அக்கறையுடன் இருந்தார். இதனால் அவர் மீது நான் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளேன்.
சென்னை மக்கள் குடிநீர் திட்டத்துக்காக உரிய நேரத்தில் தனது பங்களிப்பை அளித்து உதவி செய்தார். இதை எப்போதும் மறக்க முடியாது. அவர் விரைவில் குணமடைய மீண்டும் ஒருதடவை எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications