இன்று சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் பேச்சு: நாளை ராகுல் வருகை
சென்னை: தீவுத்திடலில் இன்று மாலை நடக்கும் திமுக பிரசார கூடத்திற்க்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தின் பாதுகாப்பிற்காக மட்டும் ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகின்றனர்.
இன்று தீவுத்திடலில் நடக்கும் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் பேசுகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் அதே மேடையில் பேசுகின்றனர். இந்த கூட்டத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்கும்.
கூட்டம் நடக்கும் தீவுத்திடலில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
இன்று காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் சோனியா காந்தி இங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுவைக்கு செல்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு, மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடல் அருகே சென்னை துறைமுகத்துக்குள் இருக்கும் அடையாறு ஐ.என்.எஸ். தளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து காரில் தீவுத்திடல் செல்கிறார்.
பிரமாண்ட கூட்டத்தில் பேசிவிட்டு மாலை 6.30 மணி அளவில் மீண்டும் காரில் அடையாறு ஐ.என்.எஸ். தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்றடைகிறார்.
பின்னர் விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்படுகிறார். ஒரு வேளை மாலை 6.30 மணிக்குள் கூட்டத்தை முடிக்க முடியாமல் காலதாமதமாகி விட்டால், சோனியாகாந்தி தீவுத்திடலில் இருந்து காரில் சென்னை விமான நிலையம் செல்வார். அவர் காரில் விமான நிலையம் செல்லும் பாதையில், வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
ராகுல்காந்தி பிரசாரம்:
இந் நிலையில் திமுக-காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தியும் பிரசாரம் செய்கிறார்.
நாளை (புதன்கிழமை) விமானம் மூலம் கோவை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு திண்டல் வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு பகல் 12 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
பின்னர் ஹெலிகாப்டரில் கரூர் சென்று, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து விளாத்திக்குளம், மற்றும் புதுக்கோட்டையில் பிரசாரம் செய்கிறார்.
நாளை மறுதினம் பிற்பகலில் பாண்டிச்சேரி சென்று தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு இரவே டெல்லி திரும்புகிறார்.