தமிழக பஸ் எரிப்பு வழக்கு-3 பேர் சொத்துகள் பறிமுதல்: என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: தமிழக பஸ் எரிப்பு வழக்கில் தலைமறைவாகவுள்ள கேரளாவைச் சேர்ந்த 3 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட தமிழக அரசு பஸ் ஒரு கும்பலால் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக மதானியின் மனைவி சூபியா உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 10 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணூரை சேர்ந்த சபீக், முகமது சாபீக், எர்ணாகுளத்தை சேர்ந்த அனூப் ஆகிய 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.
தேசிய புலனாய்வு அமைப்பு 3 பேரையும் தேடி வருகிறது. ஆனால் அவர்களை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் அந்த 3 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்ய என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீவிரவாதத்தை ஒடுக்க கேரளாவில் புதிய சட்டம்:
இதற்கிடையே, கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதத்தை ஒடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
கேரள சட்டசபை தேர்தல் வரும் 13-ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும், இடதுசாரி அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
இது தவிர பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஒரு அணியாக போட்டியிடுகிறது. பாஜக தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி நேற்று வெளியிட்டார். கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம், கல்வி, வேலை வாய்ப்பில் முற்பட்ட வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications