கோவைக்கு வராத விஜயகாந்த்தை புறக்கணித்த அதிமுகவினர்!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான நடிகர் அருண் பாண்டியனை ஆதரித்து பெருமகளூர், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களில் விஜய்காந்த் பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில்,
தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது. அடிப்படை வசதிகள் இல்லை. காவிரிப் பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அடிப்படை வசதி, குடிநீர் வசதிகளை ஜெயலலிதா செய்து தருவார்.
திமுகவினர் ஊர், ஊராக சென்று பொய் சொல்லி வருகிறார்கள். விஜயகாந்த் தனித்து நின்றால் அவர்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். நான் திமுகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் கொண்டாடி இருப்பார்கள். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் திண்டாடி வருகிறார்கள்.
என்னை இழுக்க அழகிரி எடுத்த முயற்சி எல்லாம் வீணானது. ஒரு மனிதனின் அடிப்படை குணத்தை யாராலும் மாற்ற முடியாது. விஜயகாந்த் கோபக்காரன்தான். ஆனால் அது ஒரு பிள்ளையை படிக்கச் சொல்லி தந்தை கண்டிப்பது போன்றதாகும். அதைப்போய் பெரிதுபடுத்துகிறார்கள். அதைபற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை.
ஒரு குழந்தை தவறு செய்தால் பெற்றோர்கள் அடிப்பார்கள். நான் தான் எனது உதவியாளரை தலையை பிடித்து உள்ளே தள்ளினேன். ஆனால் வேட்பாளரை அடித்தார் என்று பிரச்சாரம் செய்தனர்.
என்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். என்னை பற்றி என்ன பிரச்சாரம் செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினால் செய்தால் எனக்கு சந்தோஷம் தான்.
கடந்த 5 ஆண்டு காலமாக நான் கேட்ட எந்த கேளிவிக்கும் முதல்வர் கருணாநிதி பதில் அளித்ததேயில்லை. துணிச்சல் இருந்தால் என்னுடைய கேளிவிகளுக்கு நேரடியாக பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
முதல்வர் கருணாநிதியால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கைத் தமிழர்களை காட்டிக் கொடுத்து அநத இனத்தையே அழித்தது காங்கிரஸ். அதற்கு கருணாநிதி துணை போனார்.
கரும்பு தோட்டத்துக்கு யானையையும், கழனி மேட்டுக்கு எருமையையும், கொய்யா தோப்புக்கு குரங்கையும் காவல் வைத்தது போல நாம் தமிழகத்தை திமுகவிடம் கொடுத்துவிட்டோம். திமுக ஆட்சியை அகற்ற மக்கள் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
சின்னத்தை மாற்றிச் சொன்ன விஜயகாந்த்:
முன்னதாக திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உலகநாதனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் விஜயகாந்த்.
அவர் கூறுகையில், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உங்களுக்கு தேவையானவைகளை நிச்சயம் செய்வார். இதில் எந்த மாற்றமும் இல்லை. நான் பிரச்சாரம் செய்வதை சிலர் மீடியாக்கள் எடிட்டிங் செய்து ஒளிபரப்பி வருகிறது.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவுடன் நான் கூட்டணி வைத்துள்ளதால் திமுக பயப்படுகிறது. தேர்தல் கமிஷன் எல்லா கட்சிகளுக்கும் பொதுவாகத்தான் நடவடிக்கை எடுக்கிறது. இந்த நடவடிக்கையால் எங்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் ஒரு மத்திய அமைச்சரோ தன் மீது வழக்கு போட்டால் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என்கிறார்.
நேற்றைய தினம் பஸ்சின் மேற்கூரையில் ரூ.5 கோடி பிடிப்பட்டு இருக்கிறது. இது கண்டிப்பாக உழைத்த பணமாக இருக்காது என்றார்.
தனது பேச்சை முடித்து விட்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி அவர் பேசுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு அரிவாள், சுத்தி, நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று சொன்னார்.
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமாகும். இதை சுட்டிக் காட்டிய அவரது கட்சியினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் அண்ணே அது கதிர் அரிவாள் சின்னம் என்று எடுத்துக் கொடுக்கவே, கதிர் அரிவாளுக்கு வாக்கு அளியுங்கள் என்று கூறி பிரசாரத்தை முடித்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தை புறக்கணித்த அதிமுக:
திருத்துரைப்பூண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டபோது அதில் அதிமுகவினர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், விஜயகாந்த் இன்று கோவையில் அதிமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும்
கூட்டத்தில் பங்கேற்பார் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவர் அங்கு பங்கேற்காமல், திருத்துரைப்பூண்டியில் பிரச்சாரம் செய்துள்ளார்.
அவர் திருத்துரைப்பூண்டிக்கு வருவது எங்களுக்குத் தெரியாது. எங்களை கலந்து ஆலோசிக்காமல் அவர் பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் தான் அவரது கூட்டத்தை புறக்கணித்தோம் என்றனர்.












Click it and Unblock the Notifications