நெல்லை அருகே பிரசார கார் பாய்ந்து 2 பெண்கள் பலி: போலீசார் குவிப்பு
நெல்லை: நெல்லை அருகே உள்ள அழகநேரியில் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் வேட்பாளரின் பிரசார கார் புகுந்ததில் 2 பெண்கள் உடல் நசுங்கி இறந்தனர்.
நெல்லை அருகே உள்ள அழகநேரியில் இன்று காலை 6 மணி அளவில் பெண்கள் தெருக் குழாயில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நெல்லை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் கவுன்சிலர் கொப்பரை சுப்பிரமணியனின் பிரசார கார் அப்பகுதியில் வேகமாக வந்தது. திடீரென கார் கட்டுபாட்டை இழந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் பெண்கள் அலறி அடித்து அங்கும், இங்கும் ஓடினர். இதில் 2 பெண்கள் காரில் சிக்கினர்.
தெருக்குழாயையொட்டி உள்ள பாளையங்கால்வாய்க்குள் 2 பெண்களை இழுத்து கொண்டு சென்ற கார் தலைகீழாக விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது காரில் டிரைவரும், மற்றொரு வாலிபரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் பொது மக்கள் காப்பாற்றினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாளையங்கால்வாய்க்குள் இறங்கி தேடினர். பலியான இரண்டு பேரின் உடல்களும் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து நெல்லை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பலியானவர்கள் அழகநேரியைச் சேர்ந்த முத்தம்மாள், பாப்பாத்தியம்மாள் என தெரிய வந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. மேலும் அழகநேரி பகுதியை பதற்றமான பகுதியாக கருதப்படுவதால் இச்சம்பவம் தொடர்பாக மேலும் எதுவும் நடைபெறமாலிருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications