கூட்டணி ஆட்சி பற்றி தேர்தலுக்குப் பின் முடிவு! - பிரணாப் முகர்ஜி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரணாப் முகர்ஜி பேசுகையில், "தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆட்சியில் அங்கம் வகிக்காமலேயே காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருந்து வருகிறது.
காங்கிரஸ்-தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உதவும்.
மத்திய அரசு மாநில அரசுக்கு உரிய நிதி ஒதுக்கீடுகளை செம்மையாக செய்து வருகிறது. 12-வது நிதி கமிஷன் அறிக்கைப்படி தமிழ்நாட்டுக்கு ரூ.36 ஆயிரத்து 688 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 13-வது நிதி கமிஷன் அறிக்கைப்படி 127 சதவீதம் அதிகமாக ரூ. 83 ஆயிரத்து 437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக அரசின் வளர்ச்சிப் பணிகளில் மத்திய அரசின் பங்களிப்பு தெரியவரும். சில மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி வலுவாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் நிதி கையிருப்பு 13 ஆயிரத்து 537 கோடி ரூபாய் ஆகும். இது மிகவும் வலுவான நிதி நிலவரத்தை காட்டுகிறது. கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது...", என்றார்.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
கேள்வி: இலவச திட்டங்களை 2 பெரிய கட்சிகளும் அறிவித்துள்ளதே? இது மாநில அரசின் நிதி ஆதாரத்திற்கு ஆரோக்கியமானதா?
பதில்: தி.மு.க. அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சில திட்டங்களில் கொள்கை ரீதியாக சில மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது இயல்புதான். ஆனாலும் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்தியாக உள்ளது.
கே: காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்குமா?
ப: முதலில் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். தேர்தல் முடிவுக்கு பின்னர் அதுபற்றி அமர்ந்து பேசி முடிவு செய்வோம்.
கே: மதிய உணவுத் திட்டங்கள் மாநில நிதி நிலைமையில் பின்னடைவை ஏற்படுத்தாதா?
ப: ஏழை-எளிய மக்களுக்கு சில திட்டங்கள் தவிர்க்க முடியாதவை. மதிய உணவு திட்டம் ஆந்திர மற்றும் குஜராத் மாநிலங்களிலும் பிரபலமான திட்டங்களாக உள்ளன. தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை நிறைவேற்றி வரும் மாநில அரசு அதற்கான நிதி ஆதாரத்தை தாங்கக்கூடிய நிலையில் உள்ளது.
கே: தேர்தல் கமிஷன் நடவடிக்கையை அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்று கருணாநிதி கூறி உள்ளாரே?
ப: தேர்தல் ஆணையம் அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தன்னிச்சையான அமைப்பு. அதன் நடவடிக்கைகள் பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை.
பலவீனமான பிரதமர்
கே: ஊழல் விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு மிகவும் பலவீனமானதாக உள்ளது என ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி...
ப: பிரதமர் மன்மோகன் சிங் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பவர். அவர் பலவீனமான பிரதமர் என்பதை ஏற்க முடியாது.
கே: லோக்பால் மசோதா சட்டத்திருத்த கூட்டுக் குழு அமைக்க ஹஸாரே மேற்கொண்ட போராட்டம் குறித்து...
ப: 1970 லிருந்தே லோக்பால் மசோதா உள்ளது. ஆனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, எனது தலைமையிலான லோக்பால் நிலைக் குழு சில பரிந்துரைகளை முன்வைத்தது. ஆனால் அவற்றை அன்றைய ஆட்சியாளர்கள் ஏற்கவே இல்லை.
பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றமும் கூட லோக்பால் விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். அதுபற்றி பரிசீலிக்கப்படும்,'' என்றார்.












Click it and Unblock the Notifications