லோக்பால் மசோதா வந்தால் 85 சதவீதம் அரசியல் வாதிகள் ஜெயிலுக்குப் போவார்கள்! - மோகன்பாபு

பழம்பெரும் காந்தியவாதியும் பிரபல சமூக சேவை ஆர்வலருமான அன்னாஹசாரே, ஊழலுக்கு எதிராக டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அவருக்கு நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஊழல்வாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் ஒரே குரலாக ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் ஊழல் தலைவர்கள் நடுக்கத்தில் உள்ளனர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்பாபுவும் அண்ணா ஹஸாரேவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று திருப்பதியில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களை திரட்டி ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அன்னா ஹசாரே ஆலோசனைப்படி மத்திய அரசு லோக்பால் மசோதா கொண்டு வரவேண்டும். இம்மசோதா கொண்டு வரப்பட்டால் நாட்டில் ஊழல் ஒழிக்கப்படும்.
தற்போது மக்கள் பணத்தை லட்சம் கோடி அளவுக்கு கொள்ளையடித்து விட்டு சுதந்திரமாக சொகுசு கார்களில் உலா வரும் ஊழல்வாதிகள் 85 சதவீதம் பேர் சிறையில் தள்ளப்படுவார்கள்.
தோற்றுப் போய்விட்டோம்...
இன்றைக்கு நாட்டில் நடைபெறும் லட்சம் கோடி ஊழல்களை ஒழிக்க மக்களாலும் சமூக நல அமைப்புகளாலும் இயலவில்லை. உண்மையில் இந்த ஊழல்வாதிகளிடம் என்னைப் போன்றவர்கள் தோற்றுப்போய் விட்டோம். எதிர்கால சந்ததியாவது ஊழலற்ற இந்திய அரசை அமைக்க நாம் உதவ வேண்டும்.
ஊழல்வாதிகளை தட்டிக்கேட்கும் அளவுக்கு மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். மாணவர்களை அரசியலில் ஈடுபடுத்தி அரசியல் ஊழல் ரவுடிகளை ஒழித்துக்கட்ட வேண்டும். அன்னா ஹசாரேவை முன்மாதிரியாக தலைவராக ஏற்றுக் கொண்டு மாணவர்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களை கடுமையாகத் தண்டிக்க வழிவகை காண வேண்டும். ஊழலுக்கு எதிராக புரட்சி செய்த அண்ணா ஹஸாரே நலமுடன் வாழ வாழ்த்துவோம்," என்றார்.












Click it and Unblock the Notifications