ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தர்மயுத்தம் தொடரும்! - வைகோ உறுதி

சுற்றுச்சூழலை நாசப்படுத்தி வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிலம், நீர், காற்று அனைத்தையும் நச்சுத்தன்மை உடையதாக்கி விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என அனைவரின் வாழ்வையும், பாழாக்கி உயிருக்கே ஊறுவிளைவிக்கும் நோய்களை ஏற்படுத்துவதோடு விவசாய நிலங்களையும் பாழ்படுத்தி கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும்.
இதனால், இந்த ஆலை அகற்றப்பட வேண்டும் என்று ம.தி.மு.க. கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறது. தூத்துக்குடியிலும் சுற்றுவட்டாரத்திலும் உள்ள பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினரும் போராடினார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28-ந் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்காலிக தடை ஆணையையும் பெற்றது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நானே வழக்கு தொடுத்து வாதாடினேன்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் எந்த அளவில் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி மத்திய அரசின் தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (நீரி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு தொடுத்தவன் என்ற முறையில் நானும் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பங்கேற்கும் விதத்தில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் 8 வார காலத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கை தரப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 25-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, நீரி நிறுவனம் தனது ஆய்வை மேற்கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த 40-வது நாளில்தான் நீரி நிறுவனத்தினர் வந்தனர். ஆய்வின்போது ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்று வட்டாரத்திலும் நிலத்தின் மீதும், நிலத்தின் அடியிலும் உள்ள நீரையோ அல்லது மண்ணையோ சோதிப்பதற்கு மாதிரிகளை எடுக்கப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது...
ஆனால், எனது தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகே நீரையும், மண்ணையும் சோதனைக்கு மாதிரி எடுக்க ஒப்புக்கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலை மராட்டிய மாநிலத்தில் தொடங்கப்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் அந்த மாநில அரசு கொடுத்த லைசென்சை ரத்து செய்தது. 1994-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த ஆலை தொடங்கப்பட்டது.
போபாலில் ஏற்பட்ட ஆலை விபத்தால் நச்சுவாயு படர்ந்து மனித உயிர்கள் பலியானது போல ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுத்தன்மையால் கடல்வாழ் உயிரினங்களும், விவசாய நிலங்களும் நாசமாகும். இந்த ஆலை மூடப்பட்டாலும் இதன் நச்சுத்தன்மை சுற்றுவட்டாரத்திலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கவே செய்யும்.
அமெரிக்காவில் ஒரு தாமிர ஆலை மூடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியும் அந்த வட்டாரத்தில் நச்சுத்தன்மை நீங்கவில்லை என்பது ஓர் அபாய அறிவிப்பு ஆகும். ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றும் போராட்டத்தை தர்மயுத்தமாகவே நம்பிக்கையுடன் தொடருவோம்," என வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications