பிரசாரத்திற்குப் போய் விட்ட 25 மத்திய அமைச்சர்கள்-கோப்புகள் குவிகின்றன
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக 25 மத்திய அமைச்சர்கள் போய் விட்டதால் பெருமளவிலான கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றனவாம். பல முக்கிய கோப்புகளைக் கூட பார்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
25 அமைச்சர்களில் 9 பேர் கேபினட் அமைச்சர்கள், ஒருவர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர், மற்ற 15 பேரும் துணை அமைச்சர்கள் ஆவர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் அவரவர் கட்சிகளின் நட்சத்திர பிரசாகர்களாக பிரசாரம் செய்து வருகின்ரனர்.
இதன் காரணமாக பல முக்கிய கோப்புகள், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.
இதுகுறித்து திரினமூல் காங்கிரஸ் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான திணேஷ் திரிவேதி கூறுகையில், இப்போது நாட்டை நடத்திக் கொண்டிருப்பது அமைச்சர்கள் அல்ல, அதிகாரிகள்தான் என்றார்.
பிரசாரக் களத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமானவர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோர். இவர்கள் காங்கிரஸுக்காக மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும் அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கமிட்டியிலும் இவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் இந்த மூன்று பேருமே தற்போது பிரசாரக் களத்தில் இருப்பதால் இந்தக் கமிட்டிகளின் கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரசாரத்திற்கு அமைச்சர்கள் போய் விட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவை ரயில்வே மற்றும் ரசாயணத்துறை அமைச்சகம்தான் என்கிறார்கள். ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி நீண்ட காலமாகவே கொல்கத்தாவில்தான் இருந்து வருகிறார். மு.க.அழகிரி, தமிழகத்திலேயே இருந்து வருகிறார்.
தேர்தல் முடிந்த பிறகுதான் அமைச்சர்கள் டெல்லிக்குத் திரும்புவார்கள் என்பதால் அதுவரை அவர்கள் சார்ந்த அமைச்சகங்கள் சகஜ நிலைக்கு வர இன்னும் சில நாட்களாகும்.












Click it and Unblock the Notifications