எதற்கும் ஒரு அளவு இருக்கிறது-தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி எச்சரிக்கை
கடலூர்: எதற்கும் ஓர் அளவு இருக்கிறது. நரிக்கு நாட்டாண்மை கிடைத்தால், கிடைக்கு 2 ஆடுகள் கேட்கும் என்பது போல தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை நரிக்கு கிடைத்த நாட்டாண்மைபோல் கிடைக்கு 2 ஆடுகள் கிடைக்காதா என்று அந்த அதிகாரத்தை செலுத்திக்கொண்டிருப்பவர்களை, இவர்கள் செய்கிற அதிகாரத்தை பார்க்கிற போது என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த நிலையை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கடலூர் மாவட்ட திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:
ஒரு தேர்தலில் தவறுகள் நடக்க கூடாது. பணம் கொடுத்து வாக்குகளை பெறக்கூடாது. அதிக ரூபாயை செலவழித்து அட்டகாசங்கள் செய்யக் கூடாது. தவறான வழிகளை மேற்கொள்ளக் கூடாது. இது தேர்தல் கமிஷனுக்கு மட்டுமல்ல எல்லா பெரிய மனிதர்களுக்கும், மகான்களுக்கும் அவர்கள் வழங்க வேண்டிய அறிவுரைதான். அதை இன்றைக்கு இந்தியாவிலேயே தேர்தல் கமிஷன் வழங்குவது மாத்திரம் அல்ல, கடைபிடிக்கவும் செய்கிறது. அதற்கு அடங்கி நடக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. அதை நான் மறுக்கவில்லை.
ஆனால் எதற்கும் ஓர் அளவு இருக்கிறது. அந்த அளவுகடக்கும் போது எல்லை கடக்கும்போது நான் மாத்திரம் அல்ல. இங்கே வீற்றிருக்கும் நம்முடைய கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்துடையவர்கள்.
நரிக்கு நாட்டாண்மை கிடைத்தால், கிடைக்கு 2 ஆடுகள் கேட்கும் என்பது ஒரு பழமொழி. அதேபோல தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை நரிக்கு கிடைத்த நாட்டாண்மைபோல் கிடைக்கு 2 ஆடுகள் கிடைக்காதா என்று அந்த அதிகாரத்தை செலுத்திக்கொண்டிருப்பவர்களை, நான் உச்சத்தில் இருப்பவர்களை சொல்லவில்லை. உச்சத்தில் இருப்பவர்களுக்கு அடுத்து இருப்பவர்களை, அடுத்து இருப்பவர்களை சொல்கிறேன். இவர்கள் செய்கிற அதிகாரத்தை பார்க்கிற போது என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் பதவியிலேயே இருக்கிற ஒரு முதல்வர். 13-ந் தேதி போடப்படவுள்ள ஓட்டுகளை எல்லாம் எண்ணிப்பார்த்து நான் அதிக வாக்குகளை பெற்றுவிட்டால் மீண்டும் நான் முதல்வர். பெறாவிட்டால் வீட்டுக்கு போகவேண்டியதுதான். ஆனால் அதுவரையில் நான் முதல்வர் தான். அரசியல் சட்டப்படி, தேர்தல் ஆணையத்தின் பார்வையின்படி.
நான் நேற்று விழுப்புரத்தில் நடந்த கடல்போன்ற கூட்டத்தில் பேசிவிட்டு, இரவு தங்குவதற்கு எங்கே இடம் என்று கேட்டபோது, பொன்முடி சொன்னார், அரசாங்கத்தின் இடம் உங்களுக்கு தர முடியாது என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. வி.ஐ.பி. ஹெஸ்ட் அவுஸ் எதுவும் உங்களுக்கு ஒதுக்கவில்லை. ஆனால் நம்முடைய கட்சி அலுவலகத்திலேயே நீங்கள் இரவு தங்கிக் கொள்ளலாம் என்றார். அதைவிட எனக்கு பூரிப்பான செய்தி எதுவும் கிடையாது. ஏனென்றால் நம்முடைய உழைப்பால், வியர்வையால், நம்முடைய முயற்சியால் கட்டப்பட்ட மாளிகையில் தங்கு என்றதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அங்கேயே தங்கினேன்.
ஆனால் என்னுடைய நினைவு, நான் முதல்வர் ஆயிற்றே! நமக்கு இந்த கடலூரில் ஒரு டிராவல்ஸ் பங்களா அல்லது அரசாங்கத்துக்கு தொடர்புடைய ஒரு விடுதி ஒதுக்கப்படாததற்கு என்ன காரணம். தேர்தல் கமிஷனுடைய கண்டிப்பு. நான் அதை பொருட்படுத்தவில்லை.
ஏனென்றால் இந்த இயக்கத்தை நடத்துவதற்கு ஊர் ஊராக சுற்றி, கிராமம் கிராமமாக சென்று, நகரங்களில் வலம் வந்து இரவு நேரம் தூங்குவதற்கு தரையில் துண்டை விரித்துக்கொண்டு தூங்கியவன்தான் இந்த கருணாநிதி. அதற்காக மெத்தை, படுக்கை தேவையில்லை என்று நான் சொல்லவில்லை.
இங்கே வருகிற வழியில், கையிலே கொண்டு வந்த மாலை நேரத்து சிற்றுண்டியை அருந்துவதற்கு கூட இங்கு இடம் இல்லை. வேனிலேயே அமர்ந்து யாரும் பார்க்காமல் இருக்க என்னுடன் வந்தவர்கள் ஒரு துண்டை விரித்துக்கொண்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தேன்.
இப்படியெல்லாம் இருக்கலாமா இது நம்முடைய பெருமைக்கு இழிவல்லவா என்று நினைப்பவன் அல்ல நான். என்னை விட கேவலமாக, இழிவாக நடத்தப்படுகின்ற கூட்டம் இந்த நாட்டில் இருப்பது எனக்கு தெரியும் அதையெல்லாம் நினைத்துக்கொண்டு வேனில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்தேன்.
ஒரு பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசி இருக்கிறார். ஒற்றர்கள் அதிகாரியாக பணியாற்றுகின்ற ஒருவர், அமைச்சர் ஒருவரின் உறவினர், அந்த உறவினரை தினமும் கருணாநிதி தன்னுடைய அந்தரங்க அதிகாரியாக வைத்துக்கொண்டு இருக்கிறார். உடனடியாக அவரை அந்த இடத்திலே இருந்து அகற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுகிறார்.
எனக்கு அந்தரங்க அதிகாரி, ஏற்கனவே இருந்த மூத்த அதிகாரி மாற்றப்பட்டு அவர் இந்தியாவில் எங்கேயோ ஒரு மூலையில் தள்ளப்பட்டு இருக்கிறார். அதற்கு அடுத்து இன்னொரு அதிகாரி. அவர் மாற்று அதிகாரியாக வேலை பார்க்க வந்தவர், அவர் கருணாநிதியிடம் இருக்க கூடாது, அவரும், அவருக்கு தூது செல்வார், தேர்தல் யுக்திகளை சொல்லி கொடுப்பார், ஆகவே அந்த அதிகாரியையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அம்மையார் உத்தரவிட்டு இருக்கிறார்.
என்ன நடக்குமோ எனக்கு தெரியாது. ஒருவேளை அந்த அதிகாரியும் மாற்றப்படலாம். மாற்றப்பட்டால் அதற்காக கவலைப்படமாட்டேன். ஏனென்றால் எந்த அதிகாரியும் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்தவன் நான்.
நான் சொல்லுகிறேன், ஆணையிடுகிறேன், நாளைக்கே அந்த அதிகாரி மாற்றப்பட வேண்டும் என்று அந்த அம்மையார் உத்தரவிடுகிறார் என்றால், எவ்வளவு தைரியம், எந்த அளவுக்கு அந்த அதிகாரிகளிடத்திலே இவருக்கு ஆதிக்கம் இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லுகிறேன். எதற்கெடுத்தாலும் தேர்தல் ஆணையம் சம்மதிக்க வேண்டுமே.
உங்களுக்கு தெரியும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகத்தான வெற்றிபெற்றது. வெற்றியை பெற்றிருக்கிறது என்று சொல்கிறபோதே இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறீர்களே, நாள்தோறும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளைப் பார்த்து பூரிப்படைகிறேன் நான். எந்த ராத்திரியிலும் டி.வி.யின் முன்னால் அமர்ந்து கிரிக்கெட்டை நான் பார்த்து மகிழ்வேன். இந்தியாவுக்கு மகத்தான வெற்றி. அதுவும் எப்படிபட்ட வெற்றி இலங்கையை முறியடித்து பெற்ற வெற்றி. அந்த வெற்றியை இந்திய அரசு கொண்டாடுகிறது. பரிசு கொடுக்கிறது. மாநில அரசுகள் பல அவர்களுக்கு பரிசு வழங்குகிறது.
இதையெல்லாம் பார்த்தபோது எனக்கு, இயல்பாகவே கிரிக்கெட் பிரியன் நான். அதிலே இந்தியா வெற்றிபெற்று இருக்கிறது என்று சொல்லும்போது நானும் அந்த கிரிக்கெட் அணிக்கு ரூ.3 கோடி ரூபாய், அதிலே ஆடி வெற்றிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி என மொத்தம் ரூ.4 கோடியை அரசின் சார்பில் தருகிறோம் என்ற செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்தேன்.
இந்த 4 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் கிரிக்கெட் அணிக்கும், ஒரு கோடி ரூபாயை அஸ்வினுக்கும் தருகிற கோப்பை நான் தலைமை செயலாளருக்கு அனுப்பினேன். என்னுடைய கையெழுத்தை போட்டு, தலைமை செயலாளர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உத்தரவையும் போட்டேன்.
அவர்கள் தேர்தல் கமிஷனை கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், கொடுப்பது சரி, ஆனால் அந்த விளையாட்டு வீரர்களை, முதல்வர் அழைத்து, அவர் அதை தன் கையால் கொடுக்கக்கூடாது, நான் கொடுத்தால், அது தேர்தல் பிரசாரம் ஆகி விடுமாம். அப்படியானால், உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் பார்த்ததை, கைகொட்டி, வாழ்த்தி, அவர்களை பாராட்டிய அந்த செய்தியை, நான் சொல்லக் கூடாதாம். அப்படி நான் கொடுத்தலும் அதை யாரும் போட்டோ எடுக்கக் கூடாதாம். இப்படி ஒரு ஆணையம். இதுபோல தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது என்றால் எனக்கே சந்தேகம்? யார் முதல்வர்?, நான் தானா? என்று எனக்கே ஒரு பிரச்சினை வந்து விட்டது.
எனக்கு முன்பு தமிழக அரசை ஆண்டு கொண்டு இருந்த ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் தேர்தல் கமிஷனை எப்படி மதித்தார்கள் என்பது தெரியும். தேர்தல் கமிஷனில் இருந்த அந்த பெரிய அதிகாரி, இவருக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என்பதற்காக விமான நிலையத்திலே அவர்களை அடித்து உதைத்தார்கள், யாரை, தேர்தல் கமிஷனரை, அந்த தேர்தல் கமிஷனர் யார்?, டி.என்.சேஷன், அவரை விமான நிலையத்தில் ஓடஓட விரட்டி அடித்தார்கள்.
அவர் பதுங்குவதற்கு இடம் இல்லாமல் ஒரு காருக்குள் ஓடி புகுந்து கொண்டு, அந்த காரில் சென்று ஒரு ஓட்டலில் இறங்கி, அந்த ஓட்டலில் ஒரு ரூமுக்குள் புகுந்த கொள்ள, அந்த ரூமுக்குள்ளேயும் போய் அடித்து உதைத்தார்கள், அந்த ஓட்டலையும் நொறுக்கினார்கள். இதெல்லாம் தேர்தல் கமிஷனருக்கு ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற உபசாரங்கள், அவர் நடத்திய திருவிளையாடல், நாம் அப்படியெல்லாம் நடக்கவும் இல்லை, அதை ஏற்கவும் இல்லை, அதை ஆதரிக்கவும் இல்லை, அதை அப்போதே எதிர்த்து அறிக்கை விட்டோம். தேர்தல் கமிஷனரை அப்படி நடத்தி இருக்கக்கூடாது என்று அப்போதே சொல்லி இருக்கிறோம்.
ஆனால் இன்றைக்கு நாம் முறைப்படி தேர்தல் கமிஷனோடு சுமுகமாக போனாலும், ஒவ்வொன்றையும் அவர்களை வைத்து செய்ய வேண்டும், என்ற நிலைமையில் இருந்தாலும் கூட, வெளிப்படையாக, முதல்வராக நாம் ஆகிவிடுவோமோ என்ற நம்பிக்கையில், மமதையில், அந்த தெம்பில், இப்போதே உத்தரவிடுகிறார். நல்லவேளை, உடனடியாக கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விடு என்று சொல்லவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை இன்றறைக்கு தேர்தல் கமிஷனால் ஏற்பட்டு இருக்கும் போது, தேர்தல் கமிஷன், இந்த குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
நான் மத்திய சர்க்காருக்கு சொல்கிறேன். தேர்தல் கமிஷன் நினைத்தால் பிரதமரைக்கூட கண்டிக்கலாம். பிரதமர் கூட தேர்தல் கமிஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியது தான், அதன் விதிமுறை அது தான்.
ஆனால் அப்படிப்பட்ட விதிமுறைகளை அப்படிப்பட்ட அதிகாரங்களை அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை பெற்று இருக்கிற ஒரு மகத்தான நிறுவனம், புனிதமான நிறுவனம், என்று சொல்லப்படுகின்ற, அந்த தேர்தல் கமிஷனை எப்படி அமைப்பது? யார்-யாரைக்கொண்டு அமைப்பது, எந்த வகையில் அமைப்பது, அதற்குரிய அதிகாரங்களை எப்படி அமல்படுத்துவது என்பதையெல்லாம் கொண்ட ஒரு நிலையை இனியாவது ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று இந்த மாபெரும் கூட்டத்தின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications