அதிமுக வேட்பாளரின் சகோதரி வீட்டில் இரட்டை இலை சின்னத்துடன் பூத் சிலிப்புகள் பறிமுதல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளரின் சகோதரி வீட்டில் இரட்டை இலை சின்னம் கொண்ட 3 பெட்டி பூத் சிலிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் சங்கர குமார் வீட்டில் பூத் சிலிப்புகள் பண்டல் பண்டலாக உள்ளதாக பறக்கும்படை தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பறக்கும்படை குழுவினர் சங்கரகுமாரின் சகோதரி வீட்டில் சோதனை செய்தனர். அங்கு இரட்டை இலை சின்னத்துடன் கூடிய பூத் சிலிப்புகள் 3 அட்டை பெட்டிகளில் இருந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது,
தற்போது பூத் சிலிப்புகளை தேர்தல் ஆணையமே வழங்கி வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் புகைப்படம் இல்லாத பூத் சிலிப்புகளை வழங்க முன்வராமல் சின்னத்துடன் கூடிய பூத் சிலிப்புகளை வழங்க வைத்துள்ளது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பூத் சிலிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றனர்.
குப்பை தொட்டியில் பூத் சிலிப்புகள்:
வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வினியோகிக்கப்படும் பூத் சிலிப்புகள் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்ததால் சுரண்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் குப்பை தொட்டியில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப்புகள் கிடந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிரிச்சி அடைந்தனர். அதிமுக நகர செயலாளர் செந்தூர் பாண்டியன் மற்றும் பொதுமக்கள் சிலிப்புகளை எடுத்து பார்த்தபோது அவை 15, 16வது வார்டுகளுக்குரியது என்பது தெரிய வந்தது.
இது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த தேர்தலின் போது பூத் சிலிப்புகள் கட்சி நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அரசு ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூத் சிலிப்புகள் குப்பை தொட்டியில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.