வாக்காளர்களை குழப்பும் எஸ்.எம்.எஸ்களை தடை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
சென்னை: வாக்காளர்களை குழப்பும் வகையில் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
வரும் 13-ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலையொட்டி தமிழக வாக்காளர்கள் ஒரு மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று எஸ்.எம்.எஸ். மற்றும் எப்.எம்.ஆகிய ஊடகங்கள் மூலமாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் மூலம் தான் இத்தகைய செய்திகள் பரப்பப்படுகின்றன என்ற தவறான எண்ணத்தை வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தவே எதிர்கட்சிகள் இவ்வாறு திட்டமிட்டு செயல்படுகின்றன.
எனவே, வாக்காளர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் இத்தகைய செய்திகளை பரப்பக் கூடாது என்று என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும் என திமுக தலைமைக்கழக தேர்தல் பணிக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம் தலைமை தேர்தல் ஆணையருக்கும், தமிழ்நாடு தேர்தல் அதிகாரிக்கும் பேக்ஸ் மூலம் புகார் தெரிவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.