சனாதனத்தை ஒழிக்கனுமா? ஆட்சியிலிருந்து விரட்டியும் உதயநிதி திருந்தல! பஞ்சாயத்துக்கு வந்த பாஜக வானதி!
சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் சபாநாயகராக பதவியேற்ற ஜேசிடி பிரபாகரனை வாழ்த்தி பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து தனது உரையை முடிக்கும் போது ,"வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, முக்கியமாக மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டார். இந்த நிலையில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசிய உதயநிதிக்கு பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பதவி ஏற்று கொண்டார். நேற்று சபாநாயகர் பதவிக்கு தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகரன் மனு தாக்கல் செய்த நிலையில், அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் இன்று அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து இன்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டநிலையில், முறைப்படி அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கைகளைப் பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
உதயநிதி ஸ்டாலின்
இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சபாநாயகரை வாழ்த்தி பேசினர். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்," பெரும்பான்மை ஆளுங்கட்சிக்கு கிடைக்கவில்லை என்றாலும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்" எனக் கூறியதோடு, தனது பேச்சை முடிக்கும் போது," வெல்க தமிழ்.. வாழ்க தமிழ்நாடு... முக்கியமாக மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்" என பேசினார்.
சனாதனம்
இது பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசினார். இது தொடர்பாக அவருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் சட்டசபையின் முதல் நாளிலேயே அவர் சனாதானம் குறித்து பேசியது பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதை அடுத்து அவருக்கு எதிரான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் பாஜகவினர். அந்த வகையில் உதயநிதி இன்னும் திருந்தவில்லை எனக் கூறியிருக்கிறார் பாஜக தலைவரான வானதி சீனிவாசன்.
வானதி சீனிவாசன்
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில்," ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும்
உதயநிதி திருந்தவில்லை : மக்கள் திருத்தும் காலம் விரைவில் வரும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மக்களைப் பிரிக்கும் சனாதனத்தை அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும்" என பேசியுள்ளார்.
திமுக பாஜக மோதல்
சனாதன தர்மம் அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உதயநிதி ஸ்டாலினின், திமுகவின் கொள்கை என்றால், அதை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை? தேர்தல் பிரசாரத்தில் சனாதன தர்மத்தை இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் ஏன் பேசவில்லை?
மு.க.ஸ்டாலின்
தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளில், "நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆட்சியின் இறுதி மூச்சு வரை இந்து தர்மத்தை பழிப்பதை திமுக வழக்கமாகக் கொண்டிருந்தது. அதனால்தான், கடைசி நாளில், "நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல" என ஸ்டாலின் சொன்னதை மக்கள் நம்பவில்லை.
இந்து விரோதி
முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகள் இனி திமுகவுக்கு கிடைக்காது என்ற பேசப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லை என்றால் திமுக என்பது ஜீரோ தான். அதனால்தான், "நாங்கள் எப்போதும் இந்து விரோதி தான்" என்பதை, எதிர்க்கட்சித் தலைவரானதும் முதல் உரையிலேயே உதயநிதி பேசியுள்ளார். தமிழக மக்கள் இந்த வேடதாரிகளை புரிந்து கொண்டுதான், ஆட்சியிலிருந்து விரட்டியடித்துள்ளனர். அப்படியும் இவர்கள் திருந்தவில்லை. அதனால் மக்கள் திருத்துவார்கள். அதற்கான காலம் விரைவில் வரும்." எனக் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications