"கசப்புதான்" ஆனாலும் தவெகவுக்கு ஆதரவு! காலையில் சொன்ன காமராஜ்! மதியம் அமமுகவில் இருந்து நீக்கம்!
சென்னை: அமமுகவில் இருந்து மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று காலை சபாநாயகர் ஜேடிசி பிரபாகரனை வாழ்த்தி பேசிய போது தவெகவுக்கு முழு ஆதரவு என காமராஜ் பேசியிருந்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.
திரு.S.காமராஜ் அவர்களின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஆகவே, கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது… pic.twitter.com/gtE3o4u7AU
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 12, 2026
தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பெரும்பான்மை கிடைக்காத தவெக ஆட்சிக்கு அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவு கொடுத்ததாக வந்த செய்தியை டிடிவி தினகரன் மறுத்தார்.
இதற்கு பதிலாக காரில் அமர்ந்தபடி காமராஜ் , கையெழுத்திடுவது போன்ற வீடியோவை தவெகவினர் வெளியிட்டனர். இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் இதுகுறித்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதால் அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து போலீஸார் கண்டறிவார்கள் என டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
மேலும் தினகரன் கூறுகையில், அதிமுக அரசு அமைய காமராஜ் கையெழுத்திட்டிருந்ததால் அதை தவெக தலைவர் விஜய் வெளியிட வேண்டும். அந்த வீடியோவை எடுத்தார்கள், காரில் அமர வைத்து கையெழுத்து வாங்கலாமா, இதை செய்தது யார் என்பதையும் விஜய் தெரிவிக்க வேண்டும் என்றார்.
அப்போது காமராஜ் எம்எல்ஏவும் உடனிருந்தார். அவர் கூறுகையில், "நான் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து போடவில்லை. அந்த வீடியோ போலி" என்றார். மேலும் செய்தியாளர்கள் நிறைய கேள்விகளை கேட்டதால் டென்ஷனான காமராஜ், "என்னிடம் இவ்ளோ கேள்வி கேட்குறீங்களே, விஜய்யிடம் ஒரு பேட்டி எடுத்துவிட முடியுமா, நான் ராஜினாமா செய்கிறேன்" என்றார். விஜய் குதிரை பேரம் நடத்தியதாக தினகரன் குற்றச்சாட்டால் விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்தாலும் தவெக ஆட்சி அமையுமா என்றெல்லாம் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும், சபாநாயகராக ஜேசிடி பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அப்போது சபாநாயகரை வரவேற்று பேச சட்டசபை உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது காமராஜ் பேசிய போது, சில கசப்பான சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. எனினும் தவெகவுக்கு முழு ஆதரவையும் தருவேன் என கூறியிருந்தார். இந்த நிலையில்தான் காமராஜை அமமுகவிலிருந்து நீக்கி தினகரன் உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications