கழுகுமலையில் கடைக்குள் பதுங்கிய கட்டுவிரியன்! காங்கிரஸ் பிரமுகர் மரியதங்கராஜுக்கு என்னாச்சு தெரியுமா
சென்னை: கழுகுமலையில் பழைய இரும்பு கடையில் சாக்கு மூட்டைகளுக்கு இடையே பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் நகர காங்கிரஸ் தலைவர் மரியதங்கராஜ் உயிரிழந்தார்.. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.. அப்பகுதி மக்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்துது?
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை திருமாளிகை தெருவைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மகன் மரியதங்கராஜ் வயது 52.. கழுகுமலை - சங்கரன்கோவில் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே பழைய பேப்பர் மற்றும் இரும்பு வியாபாரக் கடை நடத்தி வந்தார்.

கட்டுவிரியன் பாம்பு பதுங்கியிருந்தது
இவர் நகர காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.. இதனால் அந்த பகுதியில் அனைவராலும் அறியப்பட்டவரும்கூட.. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கடையில் இருந்த மேஜைக்கு அடியில் கிடந்த பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.. ஒவ்வொரு பொருளாக அடுக்கி வைத்து கொண்டிருந்தபோது. பழைய சாக்கு மூட்டைகளுக்கு இடையே பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பு திடீரென அவரது கையில் கடித்தது..
காங்கிரஸ் பிரமுகர் பலி
இதனால் வலியால் அலறி துடித்தார் மரியதங்கராஜ்.. இவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர்.. உடனடியாக 108 வாகனம் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்..
கட்டுவிரியன் பாம்பின் விஷம் மிகவும் தீவிரமானது, கடித்த சில நிமிடங்களிலேயே உடலில் பரவிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடையில் தினமும் வேலை செய்யும் இடத்தில் பாம்பு பதுங்கியிருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.. இந்தச் சம்பவம் குறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த மரியதங்கராஜுக்கு மனைவி செல்லத்தாய் வயது 47 மற்றும் ஒரு மகன் உள்ளனர்.. குடும்பத்தினர் கடுமையான சோகத்தில் இருக்கின்றனர்.
பழைய இரும்பு கடை பொருட்கள்
எப்போதுமே பழைய கடைகள், கிடங்குகள் போன்ற இடங்களில் சாக்கு மூட்டைகள், பழைய பொருட்கள் குவிந்து கிடக்கும் இடங்களில் பாம்புகள் பதுங்கியிருக்கும் வாய்ப்பு அதிகம்.
அத்தகைய இடங்களில் கையால் நேரடியாக தேடுவதை தவிர்த்து கம்பு அல்லது தடியால் கிளறிப் பார்த்த பிறகே பொருட்களை எடுப்பது நல்லது.. பாம்பு கடித்தால் பதற்றமின்றி உடனடியாக 108 அழைத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வதே உயிரை காக்கும் ஒரே வழி என்று அறிவுறுத்துகிறார்கள். நகர காங்கிரஸ் தலைவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
கட்டுவிரியன் கடித்தால் என்ன செய்ய வேண்டும்
கட்டுவிரியன் பாம்பு உட்பட எந்த பாம்பு கடித்தாலும், முதலில் பதற்றப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும்.. கடிபட்ட கையை அல்லது காலை அதிகமாக அசைக்காமல் வைத்திருக்க வேண்டும்.. சிலர் பதற்றத்தில் பயத்தில் அசைத்து விடுவார்கள்..
அதற்காக கத்தியால் கீறுவது, வாயால் விஷம் உறிஞ்சுவது, இறுக்கமாக துணி கட்டுவது போன்றவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாது.. உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.. மருத்துவர்கள் தரும் விரோதவிஷ மருந்துதான் உயிரைக் காப்பாற்றும்..!!












Click it and Unblock the Notifications