இது இன்னொரு சுதந்திர போராட்டம்: ஜெயலலிதா
இன்று சென்னையில் ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், திருவொற்றியூர் வேட்பாளர் குப்பன், ஆர்.கே.நகர் வேட்பாளர் வெற்றிவேல், துறைமுகம் வேட்பாளர் பழ.கருப்பையா, பெரம்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சவுந்திரராஜன், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காக நான் உங்கள் முன் வந்திருக்கிறேன். திமுக ஆட்சியில் சிலர் மட்டும் பணக்காரர்களாகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த தேர்தல் மூலம் தமிழ்நாட்டை மீட்டெடுக்கவில்லை என்றால் வேறு எப்போதும் மீட்க முடியாது.
ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். சட்டம்- ஒழுங்கு காக்கப்பட வேண்டும். திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. நன்மை செய்வது போல சொல்லி லாபம் அடைகிறார்கள். இந்த ஆட்சியில் இருந்து விடுபட மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது.
தேச விரோத சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டு கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் நடத்தியிருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தை தமிழக மக்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தினார்கள் என்ற வரலாற்றுச் சாதனையை இந்த தேர்தல் மூலம் நிகழ்த்தி காட்ட வேண்டும். அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் வகையில் வரலாறு காணாத வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
கருணாநிதி சாதனை செய்வதாக கூறுகிறார். ஆனால் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குத்தான் முக்கிய பதவியை கொடுத்து இருக்கிறார். தன்னுடைய மகனை துணை முதலமைச்சர் ஆக்கினார், மற்றொரு மகனை மத்திய அமைச்சராக்கினார், பேரனை மத்திய அமைச்சராக்கினார், மகளை நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் ஆக்கினார். இதுதான் கருணாநிதியின் 5 ஆண்டு கால சாதனை.
இந்த ஆட்சியில் 7 கோடி மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் திமுகவினர் அனைத்து தொகுதிகளிலும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். பணம் தந்தால் பெற்றுக் கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
திமுக தோற்பது உறுதி என்று தெரிந்து கொண்டு பணமழை பொழிகிறார்கள். 234 தொகுதிகளிலும் இதேநிலைதான் உள்ளது. அதைப்பார்த்து அதிமுக தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் மலைத்துப்போக வேண்டாம், களைத்து விட வேண்டும். திமுக தோற்பது உறுதி. எவ்வளவு பணத்தை கொட்டி கொடுத்தாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது.
தேர்தல் முடிவு மூலம் மக்கள் மாற்றத்தை தர தயாராகி விட்டனர். அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதை யாரும் மறுக்க முடியாது. தொண்டர்கள் சோர்வடையாமல் தமிழகத்தை மீட்க வேண்டும். அதற்கு உற்சாகமாக பணியாற்றுங்கள். ஜனநாயக நாட்டில் தேர்தல் ஜனநாயக உரிமை. அதன்மூலம் தமிழகத்தை காப்பாற்றுங்கள். நான் ஆட்சிக்கு வந்ததும் சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவேன். ரவுடி கும்பலை ஒழிப்பேன். மக்கள் சுதந்திரமாக வாழ நடவடிக்கை எடுப்பேன். மின்வெட்டு இல்லாத நிலைமையை உருவாக்குவோம்.
சென்னை குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்தேன். சென்னை மக்களுக்காக மேலும் பல திட்டங்களை நிறைவேற்றுவேன். மீனவர்கள் எந்திரப்படகுகள் வாங்க மானியம் வழங்கப்படும். மீன்பிடி தொழில் இல்லாத பருவ காலத்தில் ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படும். மீனவர் நலன் பாதுகாக்கப்படும். 5 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுகவை ஆதரியுங்கள்.
இந்த தேர்தல் மூலம் தமிழ்நாட்டை மீட்டெடுக்கவில்லை என்றால் வேறு எப்போதும் கருணாநிதியின் குடும்பத்தினரிடமிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க முடியாது என்றார்.