வாக்களிக்கத் தவறக்கூடாது; தவறாக வாக்களிக்கக்கூடாது-திருமாவளவன்
சென்னை: "வாக்களிக்கத் தவறக்கூடாது'' என்பது எவ்வளவு இன்றியமையாததோ, அதைவிட "தவறாக வாக்களிக்கக்கூடாது'' என்பது மிக மிக இன்றியமையாததாகும். அந்த வகையில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி ஆகிய இரு அணிகளையும் சீர்தூக்கிப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த இரண்டு அணிகளின் தலைவர்கள் கடந்த காலத்தில் ஆற்றிய பணிகள், சாதனைகள் மற்றும் எதிர்வரும் காலங்களில் ஆற்றவிருக்கிற வாக்குறுதிகள் யாவற்றையும் மக்கள் மதிப்பீடு செய்து பார்க்கவேண்டும்.
தனிநபர் விமர்சனங்கள், பழிவாங்கும் உணர்வுகள் போன்றவற்றை முன்னிறுத்தி செய்யப்படும் பிரசாரங்களுக்கு செவிமடுக்காமல், முதல்வர் பொறுப்பிலே அமர்ந்து ஆட்சி செய்யும் அனைத்து தகுதிகளும் கொண்ட தலைவர் யார்? என்பதை வாக்காளர்கள் ஒப்பிட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும்.
கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் 19 நாட்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டேன். அந்த பிரசாரத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெரும் என்பதை காண முடிந்தது. மீண்டும், திமுக ஆட்சி தொடர தமிழக மக்கள் விரும்புவதை, ஆங்காங்கே தன்னியல்பாக உருவான பொதுமக்களின் எழுச்சியில் இருந்து உணர முடிகிறது.
வாக்களிப்பதை ஒரு பொழுதுபோக்காக கருதாமல், ஒவ்வொருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதை நெஞ்சிலே நிறுத்தி வாக்களிக்க வேண்டும். அவரவருக்கான தீர்ப்பை அவரவரே எழுதிக்கொள்ளும் ஒரு அரசியல் கடமையே வாக்களிப்பதாகும். "வாக்களிக்கத் தவறக்கூடாது'' என்பது எவ்வளவு இன்றியமையாததோ, அதைவிட "தவறாக வாக்களிக்கக்கூடாது'' என்பது மிக மிக இன்றியமையாததாகும்.
எனவே, களத்தில் உள்ள இரு அணிகளுக்கான தலைவர்களின் சமூக அக்கறையையும், தலைமைப் பண்புகளையும், கடந்த கால சாதனைகளையும் மற்றும் நம்பகத்தன்மையினையும் ஒப்பிட்டு சீராய்வு செய்து அவற்றின் அடிப்படையில், யார் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதையும் மனதில் வைத்து, வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும்.
அதாவது, யார், யார் சட்டமன்ற உறுப்பினர்களாக வேண்டும் என்பதைவிட யார் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதே இந்த தேர்தலில் முதன்மையானதாக கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சாதனைகளை நிகழ்த்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள்-ராமதாஸ்:
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், பணம் படைத்தவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஏழைகள் தங்கள் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும், விரும்புகிறவர்களை ஆட்சியில் அமர்த்தவும் கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் தேர்தல். அந்த வாய்ப்பை தமிழக வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்தி, தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய உதவ வேண்டும்.
மக்களுக்கு நல்லாட்சியை, நிலையான ஆட்சியை வழங்கும் கட்சிகள் திமுக தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளன. இன்னொரு அணி நெல்லிக்காய் மூட்டையைப் போல ஒற்றுமை இல்லாத அணியாக உள்ளது. தேர்தல் காலத்தில்கூட ஒற்றுமையாக இல்லாதவர்கள், தேர்தலுக்குப் பின் எப்படி ஒற்றுமையுடன் இருப்பார்கள்? திமுக தலைமையிலான கூட்டணி, மாநில வளர்ச்சிக்கான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி சரித்திரம் படைத்த கூட்டணி. கருவில் இருக்கும் குழந்தைகள் நலன் முதல், முதியவர்கள் நலன் வரை சிந்தித்து, அதற்கான திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை, சாதித்த சாதனைகளை எடுத்துக் கூறும் திமுக அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தேர்தலுக்காக மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அதிமுக அணியைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் காப்பாற்றப்படும். இல்லையெனில், தமிழகம் இருண்டு விடக் கூடிய நிலை உருவாகும்.
தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற, உழவர்கள், மீனவர்கள் நலன் காப்பாற்றப்பட, பெண்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர, கச்சத் தீவு மீட்கப்பட, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, பாதியில் நின்று போன சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற திமுக அணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications