சேரன்மாதேவி காங். எம்.எல்.ஏ வேல்துரையின் வெற்றி செல்லாது-உச்சநீதிமன்றம்
டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேல்துரையின் வெற்றி செல்லாது என்று, அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேரன்மாதேவி தொகுதியில் கடந்த 2006ல் நடந்த பொதுத் தேர்தலின்போது அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியனும், காங்கிரஸ் சார்பில் வேல்துரையும் போட்டியிட்டனர். இதில் வேல்துரை வெற்றி பெற்றார்.
இதை எதிர்த்து மனோஜன் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தலின்போது வேல்துரை அரசு ஒப்பந்தகாரராக இருந்தார். எனவே அவர் விதிகளை மீறி போட்டியிட்டுள்ளார். எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரியிருந்தார்.
ஆனால் இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் மனோஜ் பாண்டியன்.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில் வேல்துரையின் வெற்றி செல்லாது என்றும் அவரது பதவி பறிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது
கடந்த முறை நடந்த தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இந்த தேர்தலின்போது தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வேல்துரை தற்போதைய தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு தொடர்ந்த மனோஜ்பாண்டியன் தற்போது அதிமுக ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications