கட்சிக்கு விரோதமாக நடப்பவர்களை நீக்க எனக்கு அதிகாரம் எனக்கு உண்டு-தங்கபாலு
சென்னை: கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு உண்டு என்று
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் முடிந்துள்ளது. ஜனநாயக கடமையை பொதுமக்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள்.ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய- மாநில அரசுகள் கொண்டு வந்த சாதனை திட்டங்களுக்காக மக்கள் எங்களுக்கு வாக்களித்து சிறப்பு செய்திருக்கிறார்கள். எங்கள் கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். எங்களது கூட்டணி 3ல் 2 பங்குக்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றியடையும்.
போட்டியிட்ட அத்தனை தொகுதியிலும் வெற்றி பெறுவோம். மயிலாப்பூர் தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
கேள்வி: சொந்த கட்சியிலேயே உங்களுக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறதே?
பதில்: சில சமூக விரோதிகள் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். இதற்காக கட்சி பொறுப்பேற்காது. இருந்தாலும் என்னை விமர்சிப்பது பற்றி நான் பொறுத்துக் கொள்வேன். கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. தமிழ்நாடு முழுவதும் கட்சிக்கு விரோதமாக யார் யார் செயல்பட்டார்களோ, அவர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கி இருக்கிறோம். நேற்று 19 பேரை கட்சியில் இருந்து நீக்கினேன். அவர்களை நீங்குவதற்காக முழு அதிகாரம் எனக்கு உள்ளது.
கேள்வி: எந்த அடிப்படையில் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்?
பதில்: கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரம் எனக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நீக்கி இருக்கிறேன். கட்சி கட்டுப்பாட்டை மீறிய அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி டெல்லிக்கு தெரிவித்து விட்டுத் தான் நீக்கினேன்.
கேள்வி: உங்கள் மனைவிக்கு ஓட்டு இல்லாதது பற்றி?
பதில்: எனது மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததற்கு சிலரின் சதி வேலை தான் காரணம். இந்த சதியின் பின்னணியில் இருந்தவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி: கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் சென்று வருகிறார்களே?
பதில்: இப்போது இதற்கு பதில் சொல்ல முடியாது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சத்திய மூர்த்தி பவனுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். கட்சிக்கு விரோதமானவர்கள் மீது தமிழக காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது.
கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதாக கூறப்படுகிறதே?
பதில்: அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். கருத்துக்களை வெளிப்படுத்த அவருக்கு உரிமை உண்டு.
கேள்வி: தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை வாக்காளர்கள் வரவேற்று உள்ளார்களே?
பதில்: தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிதான் அறிவுறுத்தியது.
கருணாநிதியுடன் தங்கபாலு சந்திப்பு:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை தங்கபாலு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது துணை முதல்வர் ஸ்டாலின் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications