'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம்

சமூக சேவகர் அன்னா ஹஸாரே டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது போராட்டத்தால் ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முன் வந்துள்ளது.
போராட்டத்துக்கு பிறகு கருத்து கூறிய அன்னா ஹஸாரே, 'குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோர் சிறப்பாக செயல் படுகிறார்கள்.
அவர்கள் திட்டங்கள் நன்றாக உள்ளன. எனவே மற்ற மாநில முதல்வர்களும் அவர்களது திட்டங்களை பின்பற்ற வேண்டும்,' என்று கூறி இருந்தார். நரேந்திர மோடியை பாராட்டிப் பேசியதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
குஜராத்தில் உள்ள அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கூட, அவர் மோடியை ஆதரிப்பதை ஏற்கவில்லை. இதையடுத்து விளக்கம் ஒன்றை வெளியிட்டார் ஹஸாரே.
அதில், "நான் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களையும், ஏழை மக்களுக்காக அவர் உருவாக்கிய திட்டங்களையும்தான் பாராட்டினேன். ஆனால் மதவாதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன்" என்று கூறியிருந்தார். ஆனால் இந்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.
மேதா பட்கர்
பிரபல சமூக சேவகர் மேதாபட்கர் ஹஸாரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "நரேந்திர மோடியை அன்னா ஹஸாரே பாராட்டி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஊழலுக்கு எதிராக போராடும் இந்த நேரத்தில் மதவாதத்தை தூக்கிப் பிடிக்கும் மோடியைப் பாராட்டுவது தேவையற்றது. இது அரசியல் ஆகிவிடும்," என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங், செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். "நரேந்திர மோடியை பாராட்டும் யாரும் மதவாத எதிர்பாளர்களாக இருக்க முடியாது. ஹஸாரே அரசியல்வாதி போல செயல்படுகிறார்", என்றனர்.
இதே போல பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்ததை அடுத்து அன்னா ஹஸாரே ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் எனது கருத்து குறித்து தெளிவாக விளக்கம் கூறி விட்டேன். அதன் பிறகு என்னை விமர்சிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. தொடர்ந்து வரும் விமர்சனங்களை பார்க்கும் போது நம்மிடம் கருத்து வேறுபாடு, பிளவை ஏற்படுத்தி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சீர் குலைக்க முயற்சி நடப்பதாக தோன்றுகிறது.
ஆனால் இதற்கு யாரும் இடம் அளிக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருந்து நமது இயக்கத்தை முன் நடத்தி செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நமது சக்தியை ஒரு போதும் வீணடிக்க செய்து விடக்கூடாது. ஊழலுக்கு எதிரான நமது போராட்டம் இதுவரை சிறப்பான வெற்றியை பெற்று வந்துள்ளது. நமது ஒற்றுமை தொடர்ந்து நீடித்தால் ஊழலற்ற சமுதாயத்தை நிச்சயம் உருவாக்க முடியும்," என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications