வாக்கு எண்ணும் மையங்களில் சிஆர்பிஎப் பாதுகாப்பு அளிக்க ஜெ. கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், பல்வேறு இடைத்
தேர்தல்கள், மக்களவை பொதுத் தேர்தல் ஆகியவற்றின் போது திமுகவினரால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு முறைகேடுகளையும் அதற்கு உறுதுணையாக தமிழக காவல்துறை செயல்பட்டதையும் கருத்தில் கொண்டு அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரை பணியில் அமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும், கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், எம்.ஜி.ஆரின் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் பலவிதமான முறைகேடுகளில் ஆளும் திமுக கூட்டணியினர் ஈடுபட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சில அசம்பாவிதங்களைத் தவிர தேர்தலை அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்குப் பதிவு முடிந்து விட்டாலும் வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதிதான் நடைபெற உள்ளது. அதுவரை, வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதனை நிறைவேற்றும் விதமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல் துறையினர் மட்டுமே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
எனவே தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், பல்வேறு இடைத்
தேர்தல்கள், மக்களவை பொதுத் தேர்தல் ஆகியவற்றின் போது திமுகவினரால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு முறைகேடுகளையும் அதற்கு உறுதுணையாக தமிழக காவல்துறை செயல்பட்டதையும் கருத்தில் கொண்டு அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரை பணியில் அமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் தில்லுமுல்லு ஏதும் நடைபெறுகிறதா என்பதை 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுகவினரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications