கண்டாங்கி பட்டு உடுத்தி வந்த கள்ளழகர்!

மலை அழகா ! பெருமாள் அழகா !
சுந்தர தோளுடைய அழகன், குடியிருக்கும் மலை திருமாலிருஞ்சோலை. மலை அழகா ! இல்லை பெருமாள் அழகா ! என வியக்கும் வண்ணம் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட முடியாத அழகுடையது. ஆண்டுதோறும் மலைமேல் வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மனமிறங்கி இறைவனே மக்களை காண வரும் நாள் சித்ரா பவுர்ணமி. தங்கையின் திருமணத்தை காண வருவதுபோல் வந்து ஆண்டாளின் மாலை சூடி அடியவருக்கு அருளும் அழகர், சுந்தர ராஜ பெருமாள்.
அழகருக்கு எதிர் சேவை
மலையில் இருந்து புறப்பட்ட அழகர் கையில் வேலுடன், கள்ளழகர் வேடம் பூண்டு மதுரைக்கு வருகிறார். மலைமேல் இருந்த இறைவன் நகருக்குள் வருவதால் வழியெங்கும் மக்கள் மண்டகப்படிகள் அமைத்து சிறப்பு வரவேற்பு அளிக்கின்றனர். அழகர் மலையில் இருந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஆகிய ஊர்களின் வழியாக வரும் அழகருக்கு மதுரையில் நுழைவு வாயிலாக கருதப்படும் மூன்று மாவடியில் எதிர்சேவை அளித்த பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குகிறான் இறைவன்.
ஆண்டாள் சூடிய மாலை
தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் தங்கும் அழகர், பெருமாளாக திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஸ்ரீ வில்லிபுத்தூர் நாயகி சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் நாச்சியாரின் திருமாலையையும், கிளியையும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அழகர்.
ஆற்றில் எழுந்தருளும் அழகர்
விடிய விடிய அழகரை காண காத்திருக்கும் பக்தர்களுக்காக தல்லாக்குளத்தில் இருந்து புறப்படும் அழகர், நாளை காலையில் மதுரை வைகையாற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். வைகை ஆற்றில் கூடியிருக்கும் மக்கள் வெள்ளம், அழகரை கண்டு ஆனந்தம் பொங்க “கோவிந்தா, கோவிந்தா" என சரணகோஷ முழக்கமிடுவதை கேட்க செவிகள் குளிரும்.
மாண்டூக முனிவருக்கு விமோசனம்
ஆற்றில் இறங்கிய அழகர் கரையோரமாக வந்து வண்டியூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருள்கிறார். வண்டியூர் கோயிலில் இருந்து புறப்பட்டு தேனூர் மண்டபத்தில் திருமஞ்சனமாகிய பிறகு கெருட வாகனாரூடராய் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார்.. அன்றிரவு விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் எம்பெருமான்.
அனந்தராயர் பல்லக்கில் ராசாங்கத் திருக்கோலத்துடன் எழுந்தருளும் அழகர், ஏப்ரல் 21ம் தேதி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அழகர்மலை நோக்கி புறப்படுகிறார். அழகரை வரவேற்க கூடியதைப்போலவே அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது சிறப்பம்சம்.
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்:
இந் நிலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.












Click it and Unblock the Notifications