திருவள்ளூர் அருகே பாமகவினரை தாக்கிய திமுகவினர்: பாமகவினர் சாலை மறியல்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே திமுகவினர் குடிபோதையில் பாமகவினரை தாக்கியதால் அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ஆனந்தன் (23). இவர் தனது நண்பர் சுரேஷ் (23) மற்றும் மஞ்சுளா (35) ஆகியோருடன் லட்சுமி தெரு வழியாக நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் கணேசன், செந்தில், குட்டி, வெங்கடேசன் ஆகியோர் இவர்களை வழிமறித்து குடிபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஆனந்தன், சுரேஷ், மஞ்சுளா ஆகிய மூவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் திமுக ஒன்றிய கவுன்சிலர் அரிகிருஷ்ணன், கண்ணன், ராஜேஷ், அமரன், மஞ்சுளா ஆகியோர் வழக்கறிஞர் யோகநாதன் வீட்டுக்கு சென்று ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகின்றது.
இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் தாங்கள் கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாமகவினர் சென்னை- திருவள்ளூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.












Click it and Unblock the Notifications