தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு ஏன்?-நரேஷ் குப்தா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலி்ல் வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக வாக்குகள் பதிவாகியதற்கான காரணம் குறி்தது முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 5 சதவீதமும், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலைவிட 7 சதவீதமும் அதிகமாகும்.
இந்த தேர்தலில் அதிகமான அளவில் வாக்குகள் பதிவாகியதற்கு காரணம் வாக்களர்களின் ஆர்வம் மற்றும் உயர் நடுத்தர மக்கள் ஏராளமானோர் வாக்களித்தது தான். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி மற்றும் கடந்த 2005ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிதாக பெயர் சேர்க்கப்பட்டதும் கூட வாக்காளர்களை வாக்களி்கக தூண்டியிருக்கலாம்.
இந்தத் தேர்தலில் பணப் பட்டுவாடா மிக மிக குறைந்த அளவில் தான் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குப்பிடியால் பணம் கடத்தப்படுவதும், வினியோகிக்கப்படுவதும் தடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பணப் பட்டுவாடா தான் பெரும் பிரச்சனை. அதனால் தான் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. வேட்பாளரின் செலவுக் கணக்கை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் ஏராளமான துணை ராணுவத்தினரும், வருமானவரித்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் கணக்கில் காட்டப்படாத ரூ. 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணியில் குடியிருப்போர் நல சங்கத்தினர், சமூக சேவை அமைப்பினரையும் ஈடுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். வீடு, வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும்போது, மேற்கண்ட அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி, வாக்காளரை அடையாளம் காணவும், விண்ணப்பத்தை வழங்கிடவும், வயது, முகவரி தொடர்பான ஆவணங்களையும், புகைப்படத்தையும் வாங்குவதற்கும் உதவியாக இருப்பார்கள். இத்தகைய தனியார்-அரசு கூட்டு முயற்சி திட்டத்தை, பெங்களூர் நகரில் உள்ள ஒரு தொகுதியில் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications