நாகர்கோவில் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை: கொலையாளிகளுக்கு வலைவீச்சு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பிரபல ரவுடி நாகராஜன் இன்று வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவிலை அடுத்த வில்லுக்குறி திருவிடைகோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். பிரபல ரவுடி. குமரி மாவட்டத்தில் குளச்சல், இரணியல் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைதாகி பின்னர் விடுதலையானார். தற்போது நாகராஜன் திங்கள்சந்தையில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக அவர் ரவுடி பாதையில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதாக போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் மாவட்ட கலெக்டரை மனைவியுடன் சேர்ந்து சென்று சந்தித்து தான் திருந்திவிட்டதாகவும், போலீசார் தனக்கு தொல்லைகாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தார்.
திருந்தி வாழ்வதாக கூறிய நாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திங்கள்சந்தையில் உள்ள மார்க்கெட்டில் இருக்கும் கடைகளை குத்தகைக்கு எடுத்தார். சந்தை கூடும் நாட்களில் அங்கு சென்று வியாரிகளிடம் குத்தகை பணம் வசூலிப்பார். அதேபோல் இன்று திங்கள் கிழமை சந்தை கூடியதை அடுத்து குத்தகை வசூலிப்பதற்காக நாகராஜன் அதிகாலையிலேயே எழுந்து மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு புறப்பட்டார். திங்கள்சந்தை ரவுண்டானா பகுதியில் இருந்து கருங்கல் செல்லும் ரோட்டில் அவர் வந்தபோது திடீரென அவரது பின்னால் ஒரு டெம்போ வேகமாக வந்து மோதியது. இதில் நாகராஜன் தூக்கி வீசப்பட்டு ரோட்டில் விழுந்தார்.
உடனே டெம்போவில் இருந்து இறங்கிய சிலர் நாகராஜனை கழுத்தில் சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் மீண்டும் டெம்போவில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். நாகராஜன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்ஸ் முலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே நாகராஜன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவானீஸ்வரி, குளச்சல் டிஎஸ்பி ரவிசங்கர், இரணியல் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர்.