ராஜபக்சேவுக்கு உதவியதற்காக இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பழ.நெடுமாறன்
சென்னை: இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு துணை போனதற்காக இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரசு அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த மக்களை கொன்றது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி நோயாளிகளைக் கொன்றது, போர் முடிந்த பிறகு சித்ரவதை, முகாம்களில் அடைத்து படுகொலை, பாலியல் வன்முறை நிகழ்த்தியது, செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது, அரசுக்கு எதிரான பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை படுகொலை செய்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது ஐ.நா. விசாரணை குழு சுமத்தியுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ராஜபக்சே அரசாங்கத்தை போர்க் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததோடு சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது. தற்போதும் ஐ.நா.வும், மேற்கத்திய நாடுகளும் ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளிகள் என்றே கூறியுள்ளன.
இந்தியா ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிலிருந்து ராஜபக்சேவை காப்பற்றி, அவரது கொடுஞ்செயல்களை மூடி மறைக்க உதவியது.
இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்ததால், ராஜபக்சேவின் அட்டூழியங்களை மூடி மறைக்க இந்திய அரசு முயன்றது. தற்போது ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்பது உலகில் அரங்கில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இனியாவது இந்திய அரசு தனது கடந்த கால குற்றத்திற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்த ஐ.நா.வுக்கு உதவ வேண்டும். இதனை தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையுடனான உறவை துண்டிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்
போர்க் குற்றவாளியான இலங்கை அரசுடனான உறவை மத்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழர்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தில் தான் இலங்கை அரசு போர் நடத்தியது. மனித உரிமைகளை மீறியுள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் சர்வதேச போர் சட்ட விதிகளை மீறி இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று குவித்துள்ளது. இதனால் இலங்கை அரசை போர்க் குற்றவாளி என்று ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கை கூறுகிறது.
போர்க் குற்றங்கள், சதி செயல்களில் ஈடுபட்ட இலங்கை அதிபர் ராஜபக்சே, அவரது உறவினர்கள், இலங்கை ராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய தண்டனை பெற்றுத்தரும் முயற்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும். சிங்கள கடற்படை 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொலை செய்துள்ளது. உலகக் கோப்பையை இந்தியா வென்றதால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொடூரமாக கொன்றது.
இந்தியாவை எதிரியாக நினைக்கும் இலங்கை அரசுடனான உறவை மத்திய அரசு உடனே துண்டிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தோறும் மத்திய அரசு அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications