ஜெயிக்க போவது யாரு?-பக்திமான்களாகிவிட்ட கரை வேட்டிகள்!

கடந்த 13ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் மே மாதம் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவு அதிகபட்சமாக 77.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
எங்கள் சாதனைகளை மதித்து, மீண்டும் எங்கள் ஆட்சி மலர தான் மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர் என்று திமுக கூட்டணியினர் ஒரு பக்கம் மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளதாக மறுபக்கம் அதிமுக கூட்டணியினர் கூறி வருகின்றனர்.
இரண்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், தொண்டர்கள் கோயில்களில் சிறப்பு பூஜை, யாகம் நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை நரசிங்க பெருமாள் கோவிலுக்கு கட்சி தொண்டர்களுடன் சென்று வழிபாடு நடத்தினார். முன்னாள் அதிமுக அமைச்சர் நைனார் நாகேந்திரன் நெல்லையப்பர் கோவில், கன்னியாகுமாரி பகவதி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தினார்.
இது போல் திருச்செந்தூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு கோவில்களில் அந்தந்த பகுதியில் உள்ள கட்சி வேட்பாளர்களும் முக்கிய பிரமுகர்களும் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு செய்தனர். இரண்டு கூட்டணிக் கட்சியினருடம் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானிடம் கோரிக்கை வைத்துவிட்டு வந்துள்ளனர்.
தொண்டர்களும் தொடர்ந்து கோவில் படிகளில் ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள். இரண்டு கூட்டணிகளுமே ஆட்சியைப் பிடிப்பதில் நம்பிக்கையுடன் இருக்கின்றன. இதனால் அந்த இரண்டு கூட்டணிகளைச் சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் தற்போதே தங்களுக்கு முக்கிய இலாகாவுடனான அமைச்சர் பதவி கிடைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர வாரிய தலைவர், பப்ளிக் பிராசிகியூட்டர் போன்ற பதவிகளை பெறுவதற்கும் முக்கிய கட்சிகளை சேர்ந்த சிலர் இப்போதே களம் இறங்கி விட்டதாக தெரிகிறது. மே மாதம் 13-ம் தேதி இவர்கள் கனவு கோட்டையின் பலம் தெரியும்.












Click it and Unblock the Notifications