வாக்குப்பசதிவு எந்திரங்கள் உள்ள அறை ஜன்னல் திறப்பு: அண்ணா பல்கலையில் பரபரப்பு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் ஜன்னல் கதவு திறந்து கிடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடிபோதையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சென்னை நகரில் உள்ள 16 தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் உள்ள பிரத்யேக அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைகளுக்கு துணை ராணுவ வீரர்களுடன் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 5 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மேட்பாளர்களின் ஏஜெண்டுகளும் எந்நேரமும் அங்கு தான் இருக்கின்றனர்.
இத்தனை பேர் இருக்கையிலேயே நேற்று முன்தினம் நள்ளிரவு சைதாப்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்திருந்ததாகவும், அவை காற்றில் ஆடி சத்தம் போடுவதாகவும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த ஜன்னல் பூட்டப்பட்டு, மரக்கட்டைகள் அடித்து மறுபடியும் சீல் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் மரக்கட்டைகள் அடிக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனசேகரன் (45) என்ற ஏட்டு குடிபோதையில் உளறிக் கொண்டிருந்தார். அவர் திருவான்மியுர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றுகிறார். பணியில் குடிபோதையில் இருந்ததற்காக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் தென்சென்னை இணை கமிஷனர் பெரியய்யா, துணை கமிஷனர் சித்தண்ணன் ஆகியோர் நேரடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போதை ஏட்டு தனசேகரன் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். தற்போது இன்னொரு ஏட்டு குடிபோதையில் இருந்ததற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். எனவே, இனியாவது ஆரோக்கியமான, நல்ல பழக்கவழக்கமுள்ள போலீசாரை மட்டும் பாதுகாப்பு பணிக்கு அனுப்புமாறு இணை கமிஷனர் பெரியய்யா உத்தரவிட்டுள்ளார்.
இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் பாதுகாப்பு பணிக்கு போலீசாரை தேர்வு செய்து அனுப்பும் உதவி கமிஷனர்கள் , இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications